Monday, 24 December 2012

தொடர்ச்சி...

தற்போது இது போன்ற ஆடம்பர ஆன்மீகம் செய்யும் போலி குரு              மார்களிடம்  வியாபார போட்டி அதிகமாகிவிட்டது. ஒவ்வொரு குருவும் தொலைகாட்சியிலும், வாரப் பத்திரிக்கைகளிலும், வானொலி மூலமும், வசதி உள்ளக் குருமார்கள் தங்கள் மடத்தின் பெயரில் சொந்தமாக புத்தகம், பத்திரிக்கை வெளியிட்டும் தன்னைப்  பற்றி கற்பனை கதைகளை  எழுதியும், மக்களை ஏமாற்றி பணம் பறித்துக்  கொண்டு, தங்கள் வாழ்வை சுகமாக அமைத்து கொள்கின்றார்கள்.

இன்றைய  கலி காலத்தில் தன்னை குரு என்று கூறிக் கொள்பவர், எப்படி இருப்பார்கள் என்பதை என் குரு கொங்கணசித்தர் அன்றே கூறியுள்ளதை  கேளுங்கள்.

             குருடான செத்தெழுத்தை யுபதேசிப்பான்
                       கூறு கெட்ட பாவிசெய்த கொடுமை ஐயோ
             திருடான மருளன் பூரணமே யென்பான்
                       தீர்த்த மென்பான் கொவிலென்பான் தெய்வமென்பான்
             மருடான மருடனப்பா மயங்கி மாள்வான்
                       மனதார உபசாரக் காரஞ் செய்யமாட்டான்
             அருளான அருளைனைப்போற் பரமே யென்பான்
                       அம்பலத்தை காணாத அசடனாமே - என்கின்றார்

இந்த போலி குருமார்கள் ஒன்றுக்கும் உதவாத நான்கு ஐந்து எழுத்துகளை கூறி தீட்சாமந்திரம் என்பான். தீட்சை என்பான், இவன் திருடனாவான். தன்னை நாடி வருபவர்களிடம் புண்ணிய தீர்த்தம், முக்தி தரும் தலம் என்று ஏதாவது  பொய்க் கதைகளை கூறுவான். இதனை கேட்பவர்கள் இவன் பேச்சு சாமர்த்தியத்தால் இவன் கூறுவதை கேட்டு மயங்கி விடுவார்கள்.  இவன் கேட்கும், பொருள், பணத்தை தந்து விடுவார்கள். ஆனால் இந்த குரு பிறருக்கு மனதார உபகாரம் நன்மை செய்ய மாட்டான். பெரிய அருள் சக்தி  தன்னிடம் உள்ளது போல் வெளியில் காட்டிக்  கொள்வான். இவன் ஆன்மா  இருக்கும் இடம் தெரியாத அசடன் என்கின்றார் என்குரு .


                                                                                                                      தொடரும் ....

Tuesday, 11 December 2012

ஆடம்பர ஆன்மீகம்

தொடர்ச்சி ...

       இன்னும் ஒரு சிலர் யோககலை கற்று தருதல் , ஞான உபதேசம் செய்தல், தியானம் கற்பித்தல், வாழும் கலை உபதேசம் தருதல், என்று  உடற்பயிற்சி நிலையத்தை உலகமெல்லாம் நடத்தி, மக்களை ஏமாற்றி, பணம் பறிக்கும் குருமார்கள் ஒரு பக்கம்,  இன்னும் சில தனி நபர்கள் ஆன்மீக சொற்பொழிவு, ஆன்மீக மாநாடு, என கடவுள் பெயரை, நவக்கிரகங்கள் பெயரை கூறி         உலக நன்மைக்காக பூசை, யாகம், ஹோமம், என்று கூறி பணம் பறித்தல், சிலர் அருள்வாக்கு, அன்னதானம் அறக்கட்டளை, கல்விதானம் என்ற பெயரில் ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் செய்து  மக்களிடம்  பணம், பொருள் வசூல் செய்து  ஏமாற்றுதல் போன்ற செயல்களை செய்கின்றனர்.

       இது போன்ற போலி குருமார்களை பின்பற்றும் சீடர்களும், மக்களும், தன்  குருமார்களுக்கு விழாக்கள் எடுத்தல், விழாவில் மலர்பாதை, மலர்கீரிடம், சிவப்பு கம்பள மரியாதை, அலங்கார மேடை, சிம்மாசனம், என செய்து அலங்காரமாக, ஆடம்பரமாக தங்கள் ஆன்மீக உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள்.  இதனை செய்து முடிக்க வரவேற்பு குழு, வசூல் செய்யும் குழு, விருந்து குழு, விழாமேடை பொறுப்பு  குழு, தொலைகாட்சி, பத்திரிக்கை, சுவரொட்டி விளம்பர குழு என அமைத்துக்  கொண்டு, ஏமாறும்  பக்தர்களிடம் கோடிக்கணக்கில் வசூல் செய்து,  அதில் ஆயிரக் கணக்கில் செலவு செய்து,  நடத்தும் இந்த ஆடம்பர ஆன்மீக செயல்கள், துளி கூட ஆன்மீகம்  சம்பந்தப்பட்டது அல்ல.  இதனை ஒரு பொழுது போக்கு விழா என்று கூறலாம்.  இந்த போலி குருமார்கள் மக்கள் தங்களை மறந்துவிடாமல் இருக்க யாத்திரை என்ற பெயரில் தேசம் முழுவதும் சுற்றிக் கொண்டு பணம், பொருள் என மக்களிடம் வசூல் செய்து கொண்டு இருப்பார்கள்.  இந்த ஆன்மமீக வியாபாரம் நடத்தும் ஆன்மீக வியாபாரிகள்.


                                                                                                                             தொடரும் .... 

Tuesday, 27 November 2012

ஆடம்பர ஆன்மீகம் :-


               இந்த ஆடம்பர ஆன்மீகம் என்பது  பெரும்பாலும்  பணம், பொருள் வசதி உள்ளவர்களால்  கடைபிடிக்கப்படும் ஆன்மீக பாதையாகும்.  இந்த ஆடம்பர ஆன்மீகத்தின்  கர்த்தா யார் என்றால் மடாதிபதி, பீடாதிபதி, குரு, ஆச்சாரியார் என பெயர் வைத்துக்கொண்டு பணம் படைத்தவர்களை, செல்வந்தர்களை தமக்கு சீடராக வைத்துக் கொண்டு,அவர்களிடம் பணம், பொருள்,  சொத்தை
ஏமாற்றி வாங்கி  தான் சுகமாக வாழும் எண்ணம் கொண்டவர்கள் .

               இவர்களாகவே ஒரு பெயர் வைத்துக்கொண்டு, அல்லது சித்தர்கள்,ரிஷிகளின் பெயரை சொல்லிக் கொண்டு மடம், பீடம் என பெயர் வைத்துக்கொண்டு  தங்களை மிகவும் சக்தி உள்ளவர்கள் போல் உலகில் காட்டி கொள்வார்கள். அரசியல் தலைவர்கள் தனக்கு கீழ் தொண்டர்களை வைத்து கொள்வதுபோல் ,  இந்த போலி குருமார்கள் தனக்கு கீழ் சீடர்களை வைத்துக் கொண்டு,  நாடெங்கும்  மன்றங்களையும்,  கிளை மடங்களையும், அமைத்து கொண்டு,அங்கங்கே சின்ன சாமியார், பெரிய சாமியார், தலைமை சாமியார் என பதவிகளை நியமித்து,ஒரு தனி ஆன்மிக வியாபாரம் செய்து வருபவர்கள்.



                                                                                                                        தொடரும் ...

Thursday, 25 October 2012

சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு

  ஆன்மீகம் என்றால் என்ன ?  


           இன்றைய  மக்கள்  இடையே  ஆன்மீகம்  என்பது கடவுள் வழிபாடு          செய்வதே ஆன்மீகம், என்று கூறப்படுகின்றது. ஆனால் தமிழ் சித்தர்கள் தாங்கள் கூறிய  சித்தாந்த நெறிப்படி "ஆன்மீகம்"  என்பதற்கு மிக தெளிவாக கூறியுள்ள  கருத்துகளை பற்றி அறிவோம்.
   
           ஆன்மா+அகம் என்பதே ஆன்மீகம் எனப்படும். ஒவ்வொரு மனிதனும், தன் அகத்தின் உள்ளே மறைந்து செயல்படும் ஆன்மாவை அறிதலே
ஆன்மீகம், அல்லது தன்னையறிதல், ஞான நிலையை அடைவது என தெளிவாக கூறி உள்ளார்கள்.

            இன்றைய மக்கள்  இடையே ஆன்மீகம் என்பது  கோயில்,குளம்,  தேர், திருவிழா, பூஜை, மந்திரம், ஹோமம், யாகம் போன்றவற்றை  செய்வது, கடவுள் சம்பந்தமான புராண, இதிகாச கதைகளை படிப்பது, மந்திர உபன்யாசம் கேட்பது, யாராவது ஒருவரை குருவாக ஏற்றுக் கொண்டு, அவர் கூறும் ஒரு வாசகத்தை பாராயணம் செய்வது, போன்று இன்னும்  பலவித  சடங்கு, சம்பிராதய செயல்களை செய்து கொண்டு, இதனை ஆன்மீகம் என்று கூறிக் கொள்கிறார்கள்.

            இன்னும் சில மக்கள் ஜோதிடம் என்ற பெயரிலும், அருள்வாக்கு என்றும், சித்தர்வாக்கு, ரிஷிகள் வாக்கு எனக்  கூறிக் கொண்டு திரியும்  நபர்கள் பேச்சைக் கேட்டு பரிகாரம், விரதம், புண்ணிய யாத்திரை செய்து இதனை ஆன்மமீகம் என்று கூறி கொள்கின்றார்கள். இந்த ஆன்மீகம் பணம் படைத்தவர்களுக்கு ஒரு வகை, பணம்  இல்லாதவர்களுக்கு ஒரு வகை,    ஒவ்வொரு சாதிக்கும் ஒரு வகை, ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு வகை  என பல பிரிவுகளை கொண்டு மக்களிடையே காணப்படுகின்றது.


     இந்த ஆன்மீகம் பல வகைகளாக உள்ளன அவை :
 
         1. ஆடம்பர ஆன்மீகம்
         2. அலங்கார ஆன்மீகம்
         3. அலங்கோல ஆன்மீகம்
         4. அமங்கல ஆன்மீகம்
         5. அவலட்சண ஆன்மீகம்

    என இது போன்று இன்னும் பல வகைகள் உண்டு.



                                                                                                                             தொடரும் .....

Thursday, 4 October 2012

"குரு வணக்கம் "-11

பாடல் :-

ஆயிரத்தெட்டிதழ் வீட்டில் அமர்ந்த சித்தன்
அண்டம்  எல்லாம் நிறைந்திடும் அற்புத சித்தன்
காயமில்லா  தோங்கி வளர்காரண  சித்தன்
கண்ணொலி  யாயினானென்  றாடாய்  பாம்பே

பொருள் :-

என் குருவே சகஸ்ராகாரம் என்ற உச்சியில் ஆயிரம் இதழ்களை கொண்ட தாமரை  பூவின் மேல் அமர்ந்துள்ள குரு சித்தரே இந்த அகிலம்  எங்கும் நவகோள்கள்,பதினான்கு லோகம் எனப்படும் அண்டம் அனைத்திலும் நிறைந்து இருப்பவரே அற்புதங்கள் புரிந்து உலக உயிர்களை பசி,பிணி,மூப்பு சாக்காடு என்பவைகளில் இருந்து காப்பவரே,ஊழ்வினை,வம்சாவழிபாவ,சாப, தோஷங்களில் இருந்து விடுபட வழிகாட்டுபவரே, சரீரம்  இல்லாமல் ஓங்கி சூஷ்ம  சரீரம்  கொண்டு விண்ணிற்கும்,மண்ணிற்கும்  வியாபித்து ஜீவராசிகளின் பிறப்பிற்கு உண்டான காரணத்தையும்,அவைகள் வாழ்வில் அடையும் அனுபவிக்கும் காரியங்களையும் வெளிபடுத்துபவரே என் கண்ணில் ஒளியாய் இருந்து ஞான பார்வை தந்து வழி நடுத்துபவரே குருவே சரணம் சரணம் சரணம்  --- (பாம்பாட்டி சித்தர்) 
              

Sunday, 30 September 2012

"குரு வணக்கம்" -10

பாடல்:
"வச்சிரத்திற்   கோர்பழுது  வாய்க்கு  மாயினும்
 வல்லுடம்புக் கொருகுறை வாய்த்தி டாது 
 மெச்சுகட முள்ளவெங்கள் வேதகுருவின்
 மெல்லடி துதித்துநின் றாடாய் பாம்பே".

பொருள்:
என் வாழ்விற்கு வழிகாட்டும் ஆசானே குருவே மிகவும் 
பலம்  வாய்ந்தது என உலகமாந்தர்களால் கூறப்படும்
வஜ்ஜிரம் எனப்படும் பொருள் கூட பலம்  இழந்து
விடக்கூடும். ஆனால் ஞானமும், தவமும், சித்தும்,
உண்மையையும், சத்தியத்தையும் உலகமாந்தர்க்கு
தெளிவாக காட்டி வாழும் வழியினை ஒவ்வொரு
மாந்தருக்கும் உரைத்த என் குருவான சித்தரே தங்கள்
திருவடியினை பற்றி வணங்கி உங்கள் மென்மையான
பாதங்களை பணிந்து வாழும் எனதுசரீரத்திற்கு எந்த
பழுதும் வராமல் காத்து அருளும்படி வணங்குகின்றேன்.

      

Wednesday, 5 September 2012

"குரு வணக்கம்" - 9

பாடல் :
"கற்பகாலம் கடந்தாதி கர்த்தா வோடுங்
கடமழி யாதுவாழும் காரணக்குரு
பொற்பதமே தஞ்சமென்றே போற்று தல் செய்து
பூரணச் சிந்தையோ டாடாய் பாம்பே".

பொருள் :
இந்த பூமி தோன்றி பலகோடி காலங்களையும் ,மூன்று
யுகங்களையும் கடந்து , இந்த பூமியையும்,  நவ கோள்களையும், உயிர்களையும், தோற்றுவித்தவர் "கடவுள்" என்று வேதங்களால் குறிப்பிடப்படும் "இறைவன்" என்ற மூலப்பொருள் எப்படி
இன்றும் உள்ளது என்று கூறுகின்றார்களோ அந்த
இறைவனைப்போல் , இன்றும் கர்த்தாவாய் ,  ஆதி சக்தியாய்,
சரீரம் அழியாமல் வாழ்ந்து  வரும் என் குருவே!

இந்த பூமியிலும், அண்டவெளியிலும் கலந்து இருக்கும்
நவகோள்கள் , பஞ்சபூதங்கள் , இயற்கையின் செயலால்
உருவான மனிதர் , மிருகம் , பறவை , சீவ ராசிகள் மற்றும்
தாவரங்கள் ஆதியில் தோன்றிய உண்மை விபரத்தை அறிந்தவரே!
இறந்த காலம் , நிகழ்காலம் , எதிர்காலம் என  அனைத்து
காலங்களையும் அறிந்தவரே!

உடல் , உயிர் , இவை இரண்டும் அழிவில்லாத நிலையைப்பெற்று "சாகாகால்" ,"போகா புனல்", "வேகாத்தலை" என்ற சூட்சும
ரகசியத்தால் பஞ்ச பூதங்களை வென்று "மரணமில்லாப் பெரு 
வாழ்வு" பெற்று இன்றும் வாழ்ந்து வழிகாட்டிக்கொண்டு இருக்கும்
குருவே!

தாங்கள் அறிந்த  "வாசியோக" கலையை உலக மக்களுக்கும்
அறிய செய்த என் குருவே!
இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் , சீவராசிக்கும் ,
அவரவர் வாழ்க்கையில் உண்டாகும் அனுபவங்களுக்கும் ,
காரியம் செயல்களுக்கும் , வாழ்வின் நன்மை , தீமை , பிரச்னை,
கஷ்டம் இவைகளுக்கு ஒரு காரணம் உண்டு ,
"காரணம் இல்லையேல் - காரியம் இல்லை"  என்ற
உண்மையை உணர்த்தி, அந்த ஊள்வினைப் பதிவில் இருந்து
மீண்டு வெளியில் வர வழிகாட்டிய என் காரண குருவின்
பொற்பாதங்களை பூரணமாக பணிந்து வணங்குகின்றேன்.      
   

Tuesday, 4 September 2012

"குரு வணக்கம்" - 8

 பாடல் :
"அட்டதிக்கும் அண்ட வெளியான விடமும்
 அடக்கிய குளிகையோ டாடி விரைவாய் 
 வட்டமிட்டு வலம்வரும் வல்ல குருவின் 
 மலரடி தஞ்சமென் றாடாய் பாம்பே".
பொருள்: 
குருவே உங்கள் சக்தியினால்  நீங்கள் உருவாக்கிய 
ஒரு மூலிகை குளிகையை வாயில் அடக்கிக் கொண்டு
எட்டு திசைகளைஉடைய இந்த பூமண்டலத்தையும்,
அதற்கும் மேற்பட்ட ஆகாயத்தையும் , ஒரு நொடிப் 
பொழுதில்  சுற்றிவரும் வல்லமையும் , சக்தியும் 
பெற்ற என் ஞானகுருவே! 
உங்கள் மலர் பாதங்களே தஞ்சம் என்று பணிந்து 
வணங்குகின்றேன்.     

Monday, 3 September 2012

"குரு வணக்கம்" - 7

பாடல் :
"கூடுவிட்டுக் கூடுபாயுங் கொள்கையுடைய
 குருவின்வல் லபமெவர் கூற வல்லவர்
 வீடுபெறும் வகையைமென் மேலுங் காட்டும்
 மெய்க்குருவைப் பணிந்துநின் றாடாய் பாம்பே".  

பொருள் :
ஒரு உடலில் இருந்து மற்றொரு உடலுக்கு தன்
உயிர் நிலையை எடுத்துச்செல்லும் "ப்ரகாய பிரவேசம்"
என்னும் கூடுவிட்டு கூடுபாயும் என்ற மிகப்பெரிய
சக்தியை உடையவரே!
அணிமா , மஹிமா , ஹரிமா , லஹிமா , பிராப்தி , பிரகாமியம் (கூடுவிட்டு கூடுபாய்தல்), ஈசத்துவம் ,
வசித்துவம் , என்ற அஷ்டமா சித்துகள் சக்தியை
பெற்றவரே!
இதற்கு மேலும் உள்ள சக்திகளும் உள்ளவரே! உங்கள்
சக்திகளை எவராலும் அளவிட்டு கூறமுடியாது .
தங்களை குருவாக ஏற்று தாங்கள் போதனை செய்த
கருத்துகளை , கொள்கைகளை தன் நடைமுறை
வாழ்க்கையில் , ஞான நிலையுடன்  கடைப்பிடித்து
வாழ்ந்துவரும் மானிடர்க்கு மோட்சம் , முக்தி பெற்று
இனி பிறவி இல்லா பெருநிலையை அடைய மேலும் ,
மேலும் பல வழிகளை போதித்து வழிகாட்டி அருளும்
பூரண ஞான குருவே! உங்கள் திருவடியை பணிந்து
வணங்குகின்றேன்.

Sunday, 2 September 2012

"குரு வணக்கம்" - 6

பாடல் :
"காயம் நிலை யழிகையைக் கண்டு  கொண்டு பின்
 கற்புநிலை யுள்ளிற்கொண் டெக்கால மும்வாழும்
 தூயநிலைகண்டபரி சுத்தக் குருவின்
 துணையடி தொழுதுநின் றாடாய் பாம்பே".

விளக்கம் :    
உலகில் உருவான மனிதன் , விலங்கு , தாவரம் என
அனைத்துவகை உயிரினங்களின் சரீரம் , உயிர் இவைகள்
ஒருநாள் அழிந்து விடும் என்று தெரிந்து உணர்ந்துள்ள
ஒவ்வொரு மனிதனும் , சித்தர்கள் ஆகிய நீங்கள் காட்டிய
வழியில் உங்கள் போதனை , ஞான கருத்துகளை அறிந்து
கொண்டு வாழ்ந்தால்,வாழும் காலத்திலேயே "தன்னையறிதல்"
நிலையை அடைவான்.

அப்படி ஒரு மனிதன் தன்னையறிந்து கொண்டானாகில் தன்
பிறப்பின் "விதியை" , நிர்ணயக்கப்பட்ட வாழ்க்கை ரகசியத்தை
அறிந்து கொள்வான். தான் எப்படி வாழ்ந்தால் , தன்  வாழ்க்கை
நன்மை, மேன்மை, மகிழ்ச்சி, செல்வம் , செல்வாக்கான வாழ்வை
நாமே அமைத்து கொள்ளலாம்.

நிம்மதியும், இன்பமும் உள்ள வாழ்க்கையை எந்த சக்தியின்
உதவியும் இன்றி, எந்த மனிதரின் உதவியும் இன்றி அவரவரே
அமைத்துக்கொள்ள முடியும் என்ற சூட்சும பிரம்ம ரகசியத்தை
உலக மக்களுக்கு தெரியசெய்த குருவே !
என்பிறப்பு முதல் இறப்பு வரை எனக்கு துணையாக உள்ள
உங்கள் பொற்பாதங்களை வணங்குகின்றேன்.
   
  
         

Friday, 31 August 2012

"குரு வணக்கம்" - 5

பாடல் :
"அங்கையிற்கண்  ணாடிபோல ஆதி வத்துவை
அறிவிக்கும் எங்களுயி ரான குருவைச்
சங்கையறச் சந்ததமுந் தாழ்ந்து பணிந்தே
தமணியப்படமெடுத்  தாடாய்  பாம்பே".

பொருள் :
ஒருவன் கையில் உள்ள கண்ணாடி எப்படி அவன் உருவத்தை
பிரதிபலித்து காட்டுகின்றதோ , அதைப்போல இந்த
உலகத்தையும் ,இந்த உலகில் உருவான மனிதன் முதல்
அனைத்து சீவ ராசிகள் ,தாவரங்கள் உருவான உண்மையையும் ,
அவைகளின் "விதி" ரகசியத்தையும் , பூமிக்கு நவகோள்களால்
உண்டாகும் தாக்கத்தையும், இந்த பூமியில் நடக்கும்
செயல்களுக்கு நிர்ணயக்கப்பட்ட மாற்ற முடியாத  விதி
அமைப்பினையும்  உலக மக்களுக்கு  தெளிவாக  கூறி  விளங்கச் செய்த குருவே !

என் மனம் , மெய் , வாக்கு இவைகளால் உங்கள் திருவடியை
போற்றி பணிந்து வணங்குகின்றேன்.        

"குரு வணக்கம்" - 4

பாடல் :
"உள்ளங்கையிற் கனிபோல உள்ள பொருளை
 உண்மையுடன் காட்டவல்ல உண்மைக் குருவைக்
 கள்ளமனந் தன்னைத் தள்ளிக் கண்டு கொண்டன்பாய்க்
 களித்துக்க ளித்து நின்றாடாய் பாம்பே".

பொருள் :
பூவுலகில் பிறந்த மனிதர்கள் உண்மை ஞானத்தையும்
தங்கள் பிறப்பின் ரகசியத்தையும் தன் விதி அமைப்பு
அதனால் உண்டாகும் வாழ்க்கை நிலை , தன்  வாழ்வில்
அடையும் நன்மை , தீமைகள் இவைகள் எதனால்
உண்டாகின்றது. அதற்கு உண்மையான மூலகாரணம் என்ன ?
என இது போன்று மறைக்கப்பட்டுள்ள மூல ரகசியத்தை
உள்ளங்கையில் உள்ள பழம் "பளிச்" என்று நம் கண்ணிற்கு
தெரிவது போல உண்மை விளக்கத்தினை நன்கு புரியும்படி
தெளிவாக கூறி உலக மக்களுக்கு மன மாயையை , போலியான
உண்மைக்கு மாறான கருத்து நம்பிக்கைகளை மாற்றி,
ஞான நிலையை உலக மக்களுக்கு உப தேசித்து அருள் புரிந்து
வரும் உண்மை குருவே!  உன்னை வணங்குகின்றேன்.

மனதில் கள்ளம் , கபடு , சூது , அவநம்பிக்கை ,போட்டி ,பொறாமை ,
ஆணவம் , மாயை போன்ற தீய குணங்களை நீக்கி , சித்தர்கள் ,
ஞானி , மகான்களாகிய உங்களை பரிபூரணமாக நம்பி ,
உங்கள் வழிகாட்டுதளை ஏற்று வாழ்ந்து வருகின்றவர்கள்
வாழ்வை, அவர் வாழ்க்கையை உயர்வாக அமைத்து தருபவரே,
உங்கள் பாதங்களை பணிந்து வணங்குகின்றேன்.

Thursday, 30 August 2012

"குரு வணக்கம்" - 3

பாடல் :
"வேதப்பொருள் இன்னதென்று வேதங் கடந்த
 மெய்ப்பொருளைக் கண்டு மனம் மேவி விரும்பிப்
 போதப்பொருள் இன்னதென்றும் போதனை செய்யும்
 பூரணசற் குருதாள்கண்  டாடு  பாம்பே"

பொருள் :   
இந்த பூமியில் பிறந்து வாழும் மனிதர்கள்  நான்கு வேதங்களே
பெரிது , வேதத்தில் அனைத்தும் அடக்கம் , வேதம் அனைத்து உண்மைகளையும் கூறியுள்ளது  என  நம்பிக் கொண்டு
மக்களிடையே சிலர் பரப்புரை செய்து கொண்டு வருகின்றார்கள் .
காலம் காலமாக மக்களும் இதை நம்பிக்கொண்டு வருகின்றார்கள் .
இந்த நான்கு வேதங்களின் சூட்சுமமான  உண்மைப் பொருளை
உணராமல் தவறாக புரிந்துகொண்டு சரியை , கிரியை என்ற
நிலையில் வாழ்ந்து வருபவர்களுக்கு வேதத்தின்
உண்மைகருத்துகளை கூறி விளங்கவைப்பவரே .

இந்த நான்கு வேதங்களும் கூறிடாத , அளவிட்டு கூற முடியாத , வேதங்களாலும்  , வேதத்தை எழுதியவர்களும் அறிந்து விளக்க
முடியாத நான்கு வேதங்களுக்கும்  அப்பாற்பட்டு வியாபித்துள்ள
உலக சீவராசிகளின் பிறப்பு , படைப்பு , வாழ்க்கை , விதிஅமைப்பு
இவைகளின் மூலத்தையும் வேதத்திற் அப்பாற்பட்ட  சூட்சுமமான  உண்மைகளையும் , பாமரமக்களும் உணரும் படியாக போதித்து ,
உலகமக்கள் உண்மையான ஞானம் , முக்தி அடைய வழி காட்டிய
பூரண ஞான குருவின் திருவடியை வணங்குகின்றேன் .

Wednesday, 29 August 2012

"குரு வணக்கம்" - 2

பாடல் : 
"பொய்மதங்கள் போதனை செய் பொய்க்கு ருக்களைப்
 புத்திசொல்லி நன்னெறியிற் போக விடுக்கும்
 மெய்மதந்தான்  இன்னதென்றும்  மேவ விளம்பும்
 மெய்க்குருவின் பதம்போற்றி ஆடாய்  பாம்பே"

பொருள் :
குருவே ! இந்த கலியுகத்தில் மதம் , சாதி , இனம் , குலம் ,
கோத்திரம் என பிரிவினைகளை மனிதர்களிடையே உண்டாக்கி,
மக்களிடையே மனவேற்றுமையை பிரிவினையை  உண்டாக்கி,
தங்கள் பேச்சு திறமையால் ஆன்மிகம் , வழிபாடு என பல பொய்யான
கருத்துகளை பரப்பி ஆசான் , குரு , மடாதிபதி  என தன்னைக் கூறிக்
கொண்டு மக்களிடையே பணம் , பொருள் பறித்து வாழ்ந்து
கொண்டிருக்கும்  "போலி குருவிடம் இருந்து , அவர்களை
நம்பிக்கொண்டு இருக்கும்  மக்களுக்கு நல்ல அறிவு
உண்டாக்கக்கூடிய  நல்லகருத்துகளை  கூறி , வாழ்க்கைக்கு
நல்ல வழி  காட்டும் என்குருவே ;

போலி வேடம் தரித்து தங்கள் சுக வாழ்விற்காக மக்களை ஏமாற்றி கொள்ளையடித்து வாழும் போலி குருக்களையும் உண்மையான
கருத்துகளை கூறி திருத்தும் என் குருவே ;

இந்த போலியான வேஷதாரி குருமார்களை தக்க சமயத்தில்
வெளிப்படுத்தி , இவர்களை நம்பி ஏமாறும் மக்களுக்கு நல்ல
அற உரைகளை கூறி , உண்மையான "ஆன்மிகம்" பற்றிய
விளக்கத்தினையும் , கருத்துகளையும் கூறி சாதாரண பாமர
மக்களையும் "பூரண ஞானம்" அடைய செய்து , இந்த உலகில்
நல்ல வழியில் மனிதன் வாழ்ந்திட வழிகாட்டும் குருவே;

மனிதனாக பிறந்தவர்கள் இப்படிதான் வாழ வேண்டும் என
வாழ்ந்து காட்டிய குருவே ; ஞானம் , மோட்சம் , முக்தி
அடைய வழி  இதுதான் என கூறி அருள் பாதை காட்டிய குருவே;
உங்கள் திருவடியை மனத்தால் தியானித்து வணங்குகின்றேன்.


Tuesday, 28 August 2012

"குரு வணக்கம்" - 1

பாடல் :
"சாற்றுமுடல் பொருளாவி தத்த மாகவே 
 தானம் வாங்கி நின்றவெங்கள்  சற்குருவினைப் 
 போற்றி மனம் வாக்கு காயம் மூன்றும் பொருந்தப் 
 புகழ்ந்து புகழ்ந்து நின்றாடாய் பாம்பே".

பொருள் :
குருவே! என் உடல் பொருள் ஆவி இவை மூன்றினையும் தங்கள் 
திருவடியில் முழுமனதுடன் ஆத்மார்தமாக சமர்ப்பணம் 
செய்கின்றேன் . இவைகளை மனமுவந்து தத்தமாக
ஏற்றுக்கொண்டு அருள்புரியும் குருவே , உங்களை என் 
மனம் , வாக்கு சரீரத்தால் உங்கள் பாதங்களை போற்றி 
வணங்குகின்றேன் .   

Monday, 27 August 2012

"சித்தர் காப்பு"

"முக்தி கொண்டமோட்சமது மவுன  தீட்சை 
முனையறிந்து  செல்லுதற்கு வாலை காப்பு ; 
வெத்தி  கொண்ட நந்தீசர் பாதங்காப்பு ; 
வேதாந்தம் மூவாயிரம்  திருமூலர் பாதங்காப்பு ; 
அட்ட மா சித்திக்கும் அகத்தியன் பாதங்காப்பு ; 
அன்பே உருவாக்கும் அகப்பேய் பாதங்காப்பு ; 
பரம கயிலாய  குரு போகர் பாதங்காப்பு ; 
கொடுஞ் சீற்றம் மாறிட கொங்கணவர் பாதங்காப்பு;
சூழி முனை சூட்சும குரு சுந்தரானந்தர்  பாதங்காப்பு ;
இகத்தில் கிரகம் வென்ற இடைக்காடர்  பாதங்காப்பு ;
வரும் வாழ்நாள் சிறந்திட வான்மீகர்  பாதங்காப்பு ;
மாயத்தை நீக்கிட மச்சமுனிவர்  பாதங்காப்பு ;
முன் கர்மம் நீக்கி ஞானம் காட்டும் முனி
கமலர்  பாதங்காப்பு ;
காரியம் உணர்ந்து வெல்ல கருவூரார்  பாதங்காப்பு ;
பாவங்கள் நீங்கிட யோகம் தந்த பதஞ்சலி  பாதங்காப்பு ;
மனப்பாம்பை அடக்கிட பாம்பாட்டி  பாதங்காப்பு ;
தன்னுடல் சிறக்க செடி தந்த தன்வந்திரி  பாதங்காப்பு ;
காலம் அறிந்து வாழ ஞானம் தரும் காசிபர்  பாதங்காப்பு ;
வெட்ட வெளியை உணர்த்திட்ட கடுவெளி சித்தர்  பாதங்காப்பு ;
கொல் குணம் போக்கும் கோரக்கர்  பாதங்காப்பு ;
பரத்தை அறிந்திட ஞானம் போதித்த புலஸ்தியர்  பாதங்காப்பு ;
தேரா மருத்துவம் தெரிந்து உரைத்திட்ட தேரையர்  பாதங்காப்பு ;
வான் உலகில் மனு வாழ சிவவாக்கியர்  பாதங்காப்பு;
போகத்தை துறந்திட புகழ்ஞானம்தந்த புண்ணாக்கீசர்பாதங்காப்பு;
நல்ஞானஜோதியைநலமாய்உரைத்திட்ட நற்குதம்பைபாதங்காப்பு;
அறியாமை இருள் நீக்கிய அமலன் அழுகுண்ணி பாதங்காப்பு; 
பூஜா ஞானம் புகன்றிட்ட புலிப்பாணி பாதங்காப்பு; 
காலம் கடந்து வாழ கலை கூறிய காகபுஜண்டர் பாதங்காப்பு; 
கர்மம் நீக்கி காலனை வென்றிட காலங்கி பாதங்காப்பு;

காப்பான கருவூரார் போகநாதர் கருணையுள்ள அகத்தீசர் ,  சட்டைநாதர் மூப்பான கொங்கணரும் பிரம்மசித்தர்
முக்கியமாய் மச்சமுனி , நந்திதேவர் கோப்பான கோரக்கர் ,  
பதஞ்சலியார்  கூர்மையுள்ள இடைக்காடர் , சண்டிகேசர் 
வாப்பான வாதத்திற்கு ஆதியான வாசமுனி கமலமுனி 
காப்புதானே". 

Sunday, 26 August 2012

"உலக உயிர்வணக்கம்"

பாடல் :
"வான்வாழி வானையளி மாதவரும் வாழி
 கோன்வாழிகுரு வாழிகுவலயத்தோர் வாழி
 ஆன் வாழி அமரர் முத லிருடி சித்தர் வாழி
 நான் நீ யென லகற்று நாதாக்கள் வாழியவே".
பொருள் :
கார்மேகம் சூழ்ந்து , மழை நீர் தந்து, இந்த உலக உயிர்களை
காக்கும் வான மண்டலம் எந்த மாசும் இல்லாமல் வாழ்க!.

இந்த பூமியில் மனிதர்களாக பிறந்து ,வாழ்ந்து , என்னை
உருவாக்கி , உயிர்  தந்து , வாழ்க்கை  தந்து மறைந்து ,
வான் உலகில் 'பிறவியில்லாப் பெருவாழ்வு' பெற்று , மிகப் பெரிய தவத்தன்மை பெற்ற என் தாய் , தந்தை ,வம்சாவழி
முன்னோர்கள் வாழ்க!.

இந்த பூமியில் தன்னுயிர் போல் நாட்டையும் , தன் நாட்டு
மக்களையும்  பசி , பஞ்சம், இல்லாமல் நீதி , நேர்மை , கொண்டு
ஆட்சி செய்யும் , நல்ல ஆட்சி நிர்வாகம்  செய்யும் அரசர்கள்,
நிர்வாகிகள் வாழ்க!.

எனக்கு  பூரண ஞானம் அறிய செய்து , உலகினையும் , உலக
மக்களையும் , உலக சமுதாயத்தை புரிய செய்து, இந்த பிறவியில் நான் யார் ?. என்பதை அறிய செய்து
உலகத்தையும் , இந்த சமுதாய விதிகளை அறிய செய்து ,
நன்மை , தீமை , உண்மை ,பொய் , என அனைத்தையும்
பகுத்து அறியும்  அறிவான 'ஆறாவது அறிவை' அறியும் படி
செய்து , இந்தப் பிறவியில்  எனக்கு எது நல்லது ?. எது கெட்டது என்ற விபரங்களை போதித்து ,என்னையும் தங்கள்
சீடனாக ஏற்று பூரண ஞானத்தை  போதித்து  வரும் என்
குருமார்கள் வாழ்க !.

இந்த உலகில் பிறந்து வாழும் மனிதர்கள் , பசு முதலான  அனைத்து சீவ ராசிகளும் வாழ்க! .

இந்த உலகில் பிறந்து தேசத்திற்கும் , மக்களுக்கும் தொண்டு
செய்து வாழ்ந்து அமரத்துவம்  பெற்று , இன்றும் தான்  செய்த
நற்செயல்களால், மக்கள் மனதில்  வாழ்ந்து கொண்டு
இருக்கும் ஞானிகள் , மகான்கள் , தலைவர்கள் , பெரியோர்கள் 
நாமம் வாழ்க!.

உலக மக்களுக்கு  உண்மை ஞானம் , உலகைப்பற்றிய
விழிப்புணர்வு  போதித்த சித்தர்களும் , ரிஷிகளும் ,
முனிவர்களும்  வாழ்க !.

நான் , நீ , ஜாதி ,மதம் , என பேதம்  பிரிவினை  பாராமல் உலக
உயிர்களை , மனிதர்களை , சீவன்களை ஒன்று போல் நேசித்து  வாழும் ஞான பெரியார்கள் , வழிகாட்டிகள்  வாழ்க!  வாழ்க!  வாழ்க!.     
  

Saturday, 25 August 2012

யார் இந்த சித்தர் தாசன் ?.

நான் ஒரு ஜீவ நாடி சோதிடர் , நான் கரூர்  மாவட்டம்
குளித்தலையில் வசித்து வருகின்றேன் . என்னுடைய
இயற் பெயர் சுந்தரநாதன். என் தந்தை பெயர் T .K .சுப்ரமணியம் .
என் தாயார் பெயர் சாரதா அம்மாள் . நான் ஆரம்ப காலத்தில்
 எல்லோரையும் போல வேதாந்த முறைப்படி பக்தி செலுத்தி
 இறை வழிபாடு செய்து கொண்டு இருந்தவன் .

பின் சித்தர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என
எண்ணம் என் உள்மனதில் தோன்றியது .சித்தர்களை பற்றிய
விபர தேடல் தொடங்கியது நான் எந்த கஷ்டமும் அடையாமல்
சித்தர்களை பற்றிய உண்மை விபரங்களும்அவர்களின்
ஞானப்படல்களும் சித்தர்கள் கூறிய "சித்தாந்த கொள்கைகள்",
கருத்துகள் எனக்கு அவர்கள் அருளால் கிடைத்தது .

தற்போது மக்களிடையே "சைவம்" வளர்த்த அகத்தியர்
முதலான 18 சித்தர்களைப் பற்றி தவறான செய்திகள் சினிமா ,தொலைக்காட்சி, பத்திரிக்கை ஊடகங்கள் மூலம்
பரப்பபட்டு வருகின்றது . பணம் சம்பாதிப்பதற்காக இவர்கள் சித்தர்களைப்பற்றி கற்பனை கதைகளை வெளியிட்டு வருகின்றார்கள்.

சித்தர்கள் யார்?.
சித்தர்கள் கூறிய உண்மையான சித்தாந்த கருத்துக்கள் என்ன ?.
மனித வாழ்க்கையில் சித்தர்களின் பங்கு "என்ன?.
மனிதன் வழிபட வேண்டிய சக்தி எது?. என இது போன்று
இன்னும் பலவிபரங்களை வெளிப்படுத்த சித்தர்களின்  அருளால்
இந்த கணிணி தொடர்பு மூலம் உங்களுக்கு தெரியப்படுத்த
வேண்டும் என்பதே இந்த ஆரம்பம் .

 சித்தர்களை "மானிடப் பிரியர்கள் " என்று கூறவேண்டும் .
சித்தரைப் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளும் ஆவல் உள்ளவர்களுக்கும் . தன் விதியை அறிந்து கொள்ள வேண்டும் .
தன்னை யார்?. என்று அறிந்து கொள்ளவேண்டும் ,
தன் வாழ்வின் பிரச்னை ,சிரமம் , கஷ்டம் இவைகளை  எப்படி
தீர்த்துக்கொள்ள வேண்டும்?. என எண்ணத்துடன் வாழ்பவர்கள் அனைவருக்கும் இதன்மூலம்  சித்தர்கள் பல தெளிவு
நிலையை தருவார்கள் . மனிதன் மன குழப்பம் நீங்கி மனம்
தெளிவடையும்  நிலையை சித்தர்கள் மூலம் பெறலாம் என்பது உண்மை.

சித்தர்கள் அருளால் நான் எழுதிய 3 நூல்கள் :
1. 18 சித்தர்களின் வல்லபமும் வழிப்பாட்டு முறைகளும் .
2. அகத்தியர் வரலாறும் - அருள் ஞானப் பாடல்களும் .
3. காகபுசுண்டர் ரிஷி வரலாறும் - சித்தர் சித்தாந்த வழி ஆன்ம ஞானமும் .

என மூன்று நூல்கள் எழுதி பதிப்பித்து இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது .

மாதா , பிதா , குரு , இம் மூவருமே நமக்கு தெய்வம் என்ற நிலையில் முன்னோர் வழிபாடும் , குரு வழிபாடும் சித்தர்கள் காட்டிய வழியில் கடைப்பிடித்து வாழ்ந்து வருகின்றேன் .

தொடர்புக்கு 

சித்தர்தாசன் ,
பிருகு ஜீவநாடி ஜோதிடர் ,
குளித்தலை , கரூர் மாவட்டம் ,
தமிழ்நாடு , இந்தியா .
கைபேசி  : 9944113267