Monday, 22 April 2013

தொடர்ச்சி


1.            கர்ம முக்தி                       (தொழில் ஒழுக்க உயர்வு)
2.            தேக முக்தி                       (சரீர ஒழுக்கம்)
3.            சீவ முக்தி                         (சீவன் ஒழுக்கம்)
4.            மன முக்தி                        (மனகட்டுபாடு ஒழுக்கம்)
5.            ஆன்ம முக்தி                   (தன்னையறிதல்)
1.            கர்ம முக்தி என்பது நமக்கு வெற்றி தரக்கூடிய தொழிலை சரியாக       
               தேர்ந்தெடுத்து செய்தல். செய் தொழிலை விழிப்புணர்வுடன் செய்து,
               புகழையும், பொருளையும் அடைவது. (கர்மம் - தொழில்).
2.            தேக முக்தி என்பது நமது சாரீரத்திற்கு தீமை தரும் உணவுகளை நீக்கி,
               நன்மை தரும் உணவுகளை மட்டும் உண்டு, சாரீரத்தை வலிவும்
               வனப்பும், வாலிபமும் கொண்ட தாய் அமைத்து கொள்வது. தேகத்தில்
               உள்ள வாதம், பித்தம், சிலேத்துமம் என்ற மூன்றுதத்துவத்தையும்
               சமநிலைபடுத்தி வைத்துக் கொள்வது. இது தேக முக்தி, சரீர முக்தி
               ஆகும்.
3.            சீவமுக்தி என்பது நமக்கு வாழ்வில் தீமைகளை உண்டு பண்ணும்
               அனைத்து செயல்களையும், நட்பு, உறவு என அனைத்தையும் நீக்கி,       
                நன்மைகளை மட்டும் உண்டாக்கும் செயல்களை மட்டும் செய்து,
                எப்போதும் தன்னைப் பற்றிய விழிப்புணர்வுடன், வாழ்வது, வாழும்
                போதும், வாழ்ந்து மறைந்த போதும் நாம் செய்த செயல்களால்
                மற்றவர்கள் நம்மை பெருமைப்படுத்துவது சீவ முக்தி ஆகும்.
4.             மனதின் முக்தி என்பது நமது மனதினை சரியான பாதையில் மட்டும்
                செலுத்தி வாழ்வது, மாயையின் வசம் ஆட்படாமல் வைத்து            
                கொள்வது, இயற்கையின் உண்மை தத்துவம் புரிந்து வாழ்வது.
                 மனசலனம் நீக்கி எப்போதும் எதற்கும், மனதினை அமைதியாக
                 வைத்துக் கொண்டு வாழ்தல், சமுதாய மாற்றத்தை,   
                சமூகத்தை  புரிந்து தன்னை காத்துக் கொள்தல் மனமுக்தி ஆகும்.
5.             ஆன்ம முக்தி என்பது இந்த பிறவியில் நாம் பிறந்த காரணம் அறிவது,
                ஊழ்வினையை உணர்வது  நம் வாழ்வில் உண்டாகும் நன்மை,
                தீமைகளை பகுந்து ஆராய்ந்து தீமைகளை நீக்கி, நன்மை தரும் 
                செயல்களை அறிதல், நன்மை தீமை, பகை, நட்பு, உயர்வு, தாழ்வு என
                எல்லாவற்றையும் சமமாக பாவித்தல், தன்னையரிதலே ஆன்ம
                முக்தி ஆகும்.
                இந்த ஐந்து ஒழுக்கநிலைகளிலும் யார் வாழ்வில் சரியாக வாழ்ந்து வருகின்றார்களோ, அவர்களே முக்தி அடைந்தவர்கள், என்பது சித்தர்கள் அருளிய சித்தாந்தம் கூறும் முக்தியாகும்.
                 இன்றைய நாட்களில் சித்தர்கள் பெயரை சொல்லி, கடவுள் பெயரை சொல்லி சிலர் அன்னதானம், மடம் என மற்றவர்களிடம் பணம், பொருள், பறித்து கொஞ்சம் பிறருக்கு கொடுத்து, மற்றவற்றை எல்லாம் தன் சுகத்திற்காக பயன்படுத்தி கொள்கின்றார்கள். இந்த போலி மடாதிபதிகளை நம்பி தவறான வழியில் பொருள் சேர்த்தவர்கள் அன்னதானத்திற்கு பணம் கொடுத்தால் தான் செய்த பாவம் தீரும், பிறரை ஏமாற்றி சொத்து சேர்த்த பாவம் தீரும் என்று கூறி செயல்பட்டு வருகின்றார்கள். இப்படி செய்வதால் ஏமாற்றும் போலி குருவிற்கும் முக்திகிட்டாது. இந்த திருடர்களுக்கும் முக்திகிட்டாது.
                இதனை விடுத்து நாம் செய்யும் பரிகாரமும், பூசையும், யாகமும், ஹோமமும், அலங்கார வழிபாடும் தவறினை செய்து, தவறான வழியில் சேர்த்த பொருளால் செய்யும் தானமும், தர்மமும், கோயிலுக்கு தரும் பணம், பொருள், காணிக்கைகளும் நமக்கு முக்தியை தராது. "பிராப்த விதியினை" மாற்றாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். பக்தி, ஞான, முக்தி நிலையை முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.
                 ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் அறிவை, ஆற்றலை, இயற்கையான திறமையை அறிந்து  அந்த கலையில் நம் குழந்தைகளை வல்லவர்கள் ஆக்குங்கள். இனி வரும் சந்ததிகளுக்கு, நம் வாரிசுகளுக்கு இயற்கையின் உண்மை ஞானத்தை போதியுங்கள். சித்தர்கள் அருளிய சைவ சித்தாந்த ஞான கருத்துகளை, போதித்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றுங்கள். சாத்திரம், சடங்கு உங்களுடன் முடியட்டும். சித்தர்களை பற்றியும், அவர்கள் கூறிய "வாழும் கலையான சைவ சித்தாந்தத்தை" உலகிற்கு உணர்த்துங்கள். ஒளிமயமான வாழ்வை அமைத்து கொள்ளுங்கள்.

                                    "சித்தரை பற்றி வாருங்கள் வெற்றி நிச்சயம்".

தொடரும்.....




Saturday, 20 April 2013

தொடர்ச்சி

                              பிழைக்க முக்தி யறியாமற் சென்ம
                              பூர்வ கியானந் தெரியாமற்
                              தலையை தின்று சருகா கித்திசை
                              தயங்கு றாரடி ஞானப் பெண்ணே - என்கிறார்.
                 இந்த பூமியில் மனிதர்கள் வாழும் காலத்திலேயே துன்பம், பிரச்சனை, கஷ்டம், வறுமை, நோய் இவைகள் இல்லாமல், புகழ், செல்வம், பதவி என தன் வாழ்வில் அமைத்து கொண்டு, வாழும் போதே முக்தி நிலையை அடைய என்ன செய்ய வேண்டும்? எப்படி வாழவேண்டும்? என அறிந்து கொள்ளாமல், அதனை அறிந்து கொள்ள வலி தெரியாமல், அலைந்து கொண்டு இருக்கின்றார்கள். இந்த பிறவி எடுக்க காரணமே தன் ஊழ்வினையும், வம்சத்தில் முன்னோர்கள் காலத்தில் செய்த பாவங்களையும், சாபங்களையும், தீர்க்கவே இந்த பிறவி உண்டானது. இந்த பிறவியில் நமக்கு நிர்ணயிக்கப்பட்ட பிராப்த விதி என்ன? பூர்வ சென்மா கர்மா என்ன? என்று தெரிந்து கொள்ளாமல் எதை, எதையோ பேசிக்கொண்டு, எதை, எதையோ செய்து கொண்டு அலைகின்றார்கள். இந்த பிறவியில் நமக்கு ஏற்படும் கஷ்டம், பிரச்சனை, வறுமை, நோய் என அனைத்திற்கும் ஊழ்வினையே காரணம் என உணர்ந்து கொள்ளுங்கள். இதனை தீர்த்து விதியை தடுத்து கொள்ள தன்னையறியும் ஞான நிலையை உணருங்கள். இதனை விடுத்து கடவுள், பூசை, ஹோமம், யாகம், செய்து கொண்டு விதி தீரும், கிரகங்களின் கெடுதல் குறைந்து விடும் என்பது நல்ல உணவு இருக்க அதனை உண்ணாமல் காய்ந்து போன இலை சருகுகளை தின்று, ஆடு, மாடு போல அலைந்து கொண்டு இருப்பதற்கு சமமாகும். இதனால் பயன் இல்லை. தன்னையறியும் ஞானம் இல்லாதவன், இந்த பிறவியில் முக்தி அடைய வேண்டும். தன் வாழ்வில் கஷ்டம் தீர வேண்டும் என்று பல வகையான விரதம், பூசை, ஹோமம், வழிபாடு, கோயில், குளம் என இன்னும் ஏதேதோ பரிகாரம் செய்து கொண்டு திசை தெரியாமல் அலைந்து கொண்டு இருப்பான். முக்திக்கும் நல்வாழ்விற்கும் இந்த சடங்கு, சம்பிரதாயம், சாத்திரம் காட்டும் வழிகள் உதவாது. தன்னையரிதலே ஞானத்தை தரும், ஞானநிலையே ஊழ்வினை, விதியை தெரியபடுத்தும், இதனை அறிந்து சரியான திசையில் சென்றாலே வாழும் பொழுதே முக்தி நிலை உண்டாகும் என்கிறார் என்குரு.
                 இந்த பூமியில் பிறந்த மனிதன் தன் வாழ்வினை கடவுள் சக்தியோ, ஒரு மந்திரமோ, அல்லது பூசை, யாகம், ஹோமம் போன்ற செயல்களை செய்வதாலோ, அவை நம்மை காப்பாற்றி வாழ்வில் புகழ், பொருள், பதவி, உயர்வு என தந்து நம் வாழ்வினை உயர்த்தும், அல்லது நண்பர்களோ, உறவினர்களோ, நமக்கு உதவி செய்வார்கள் என நம்பிக்கை கொண்டு வாழாமல், தன் ஊழ்வினை விதியை தன் ஞானத்தால், தன் அறிவினால் அறிந்து கொண்டு தன் திறமையை பயன்படுத்தி நல்ல வாழ்க்கையை அமைத்து கொள்பவன். வாழும் போதே முக்தி அடைந்தவன் ஆவான்.
                 ஞானம், முக்தி, தன்னையறிதல் என்பது கடவுள், பூசை, சாத்திரம், வேதம், புராணம் சம்பந்தப்பட்டது அல்ல. இது ஞானம் அடைய உதவாது. தன்னையரிதலே ஞானம், அந்த ஞானத்தை பயன்படுத்தி வாழ்தலே முக்தி நிலை என்பதை உணருங்கள்.
                                சதுர்வேதம் ஆறுவகைச் சாத்தி ரம்பல
                                தந்திரம் புராணங்களை சாற்று மாகமம்
                                விதம்வித மானவான வேறு நூல்களும்
                                வீணான நூல்களேயென் றாடாய் பாம்பே.
                  நான்கு வேதம், ஆறுவகை சாத்திரம், தந்திரம், மந்திரம், புராணம் கூறும் கதைகள், சிவ ஆகமம், கோயில் ஆகமம், என இன்னும் இது போன்ற நூல்கள் எல்லாம் வீணான நூல்கள், இந்த நூல்கள் கூறுவதை படித்தும், பிறர் கூறுவதை கேட்டும், வாழ்வில் செயல்பட்டு வாழ்ந்தால், ஞானமும் கிட்டாது. இந்த நூல்கள் கூறும் பொய்யை நீக்கி, தன்னையறிதல் நிலைக்கு மாறி வாருங்கள் என்கிறார் என்குரு பாம்பாட்டி சித்தர்.
                 உங்களை முதலில் நீங்கள் அறியுங்கள். உங்கள் வீட்டை முதலில் சரி செய்யுங்கள். உங்கள் குடும்பத்தில் வறுமை வராமல் காத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்வை வளமானதாக உயர்த்திக் கொள்ளுங்கள். "தனி மனித உயர்வு, தேச உயர்வு" என உணருங்கள். ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் உயர்வு அடையும் போது தேசம் உயர்வு அடையும் என அறியுங்கள்.
                  மழை காலத்திற்கு வேண்டிய பொருளை வெயில்
                  காலத்தில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
                  நாளைக்கு வேண்டியதை இன்றே சேமித்து
                  வைத்துக் கொள்ளுங்கள்.
                  முதுமைக்கு தேவையான சொத்து, பணம் இவைகளை
                  இளைமையிலேயே சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
                  முக்தி என்பது நாம் ஐந்து ஒழுக்க நிலைகளில் அடைய வேண்டியது ஆகும்.



தொடரும்...........

Tuesday, 16 April 2013

முக்தி


இன்றைய மனிதர்கள் முக்தி என்பது இறந்த பின் மோட்சம், சொர்க்கம், கைலாயம், வைகுந்தம் என இந்த உலகங்களை அடைவது தான் முக்தி அடைதல், என்ற நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள். இதற்கு இறைவனை வணங்கி வந்தால், கடவுள் உபாசனை செய்து வந்தால், முக்தி கிடைக்கும் என்று எண்ணி வாழ்ந்து வருகின்றார்கள். சிலர் இறப்பது தான் முக்தி என்றும் கூறிவருகின்றார்கள். இதுபோன்ற மனிதர்களை பார்த்து என்குரு அகத்தியர் கூறுவதை கேளுங்கள்.
"நாடு மெச்ச நரகம் என்பார் சொர்க்க மென்பார்
                  நல்வினையோ தீவினையோ எண்ண மாட்டார்" என்கிறார். மற்றவர்கள் தன்னைப்பற்றி பெருமையாக எண்ண வேண்டி நரகம், சொர்க்கம், கைலாயம், வைகுந்தம் என எல்லாம் தெளிந்த ஞானி போல் பேசுவார்கள் ஆனால் தன் வாழ்வில் தனக்கு எது நல்லது, கெட்டது, தன் செயல்களில் எது நல்லது, கெட்டது என அறிந்து கொள்ளாத மூடர்கள் என்கிறார்.
                 இந்த பூமியில் நாம் உயிருடன் வாழும் காலத்திலேயே சுகம், போகம், செல்வம், புகழ், பதவி என அனைத்தையும் அடைந்து, தன்னை உருவாக்கிய தாய், தந்தையையும், தான் உருவாக்கிய மனைவி, குழந்தை, குடும்பத்தாரை சந்தோஷமாக வாழ செய்து, பெற்றோருக்கு நல்லமகனாக, மனைவிக்கு நல்ல கணவனாக, குழந்தைகளுக்கு நல்ல தகப்பனாக வாழ்ந்து, தானும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து "இல்லை" என்ற சொல்லே வாழ்வில் "இல்லை" என்று வாழ்ந்து வருவது தான் வாழ்வில் முக்தியை அடைந்த நிலையாகும்.
                 முக்தி என்பது கல்லூரி படிப்பை போன்றது உயர்நிலை பள்ளியில் தன்னிடம் உள்ள திறமை, ஞானம் அறிந்து தான் கற்ற கல்வியை மேலும், மேலும், விருத்தி செய்து அதில் நிபுணத்துவம் பெற்று, பக்குவம் அடைந்து, வெற்றியை அடையும் பருவம். பிறர் தன்னை திறமை உடையவன் என்று ஒப்புக் கொண்டநிலை. உயர்நிலைப் பள்ளியில் கணிதம் கற்றவன் கல்லூரி படிப்பில் பொறியாளர் ஆக உருவாகின்றான். விஞ்ஞானம் படித்தவன் விஞ்ஞானி, மருத்துவனாக முழுமை பெறுகின்றான். கலை கல்வி படித்தவன் அந்த கலையில் திறமையை நிரூபிக்கின்றான். இது போன்று தன் திறமையை முழுமையாக செயல்படுத்தும் சக்தியை அடைதலே, "முக்தி நிலை" என்று கூறலாம். வாழ்வில் பிறரை சார்ந்து வாழாமல், தன்னையறிந்து, முழுமை பெற்று, தன் திறமையால் புகழ், பொருள், பதவி என அனைத்தையும் அடையும் தகுதியை பெற்று, வாழ்வில் உயர்நிலையை அடைபவன் முக்தி நிலை அடைந்தவன் ஆவான். இதுவே மனிதன் முக்தி அடைதல் ஆகும்.
                  மோட்சம் வேண்டார்கள்                     -              அகப்பேய்
                                 முக்தியும் வேண்டார்கள்
                  தீட்சை வேண்டார்கள்                           -              அகப்பேய்
                                  சின்மயமானவர்கள்               -                என்கிறார்.
                  என்குரு தன்னையறிந்து ஞானம் பெற்ற மனிதர்கள், தன் வாழ்வில் இறந்தபின் மோட்சம் அடைய வேண்டும். முக்தி நிலையை அடைய வேண்டும் என எண்ண மாட்டார்கள் ஏன் என்றால் இந்த மோட்சமும், சொர்க்கமும் பொய்யானது என்று அவர்களுக்கு தெரியும். இந்த மோட்சம், சொர்க்கம், முக்தி இவைகளை அடைய கடவுள் பக்தியும், பூசை, ஹோமம், தீட்சை மந்திரங்கள் உதவி செய்யாது என தெளிவாக உணர்ந்து உள்ளதால் இவர்கள் இன்றைய போலி குருமார்களை நம்பி ஏமாறமாட்டார்கள். அவர்களிடம் சென்று தீட்சை பெற்று கொள்ளமாட்டார்கள். அவர்கள் கூறும் தீட்சை மந்திரங்களையும் கூறி, செபம் செய்து செபித்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். தன் ஞானத்தினால் உலகில் உண்மை, பொய் இவைகளை தானே அறிந்து மாயை நீக்கி, வாழ்வை மேன்மையானதாக கொண்டு, வாழும் போதே முக்தி நிலையை அடைவார்கள். அனுபவிப்பார்கள்.
                   மூலமில்லையடி                           -        அகப்பேய்
                                 முப்பொருளில்லையடி.
                   மூல முண்டானால்                     -         அகப்பேய்  
                                  முக்தியுண்டாமே.
                     இந்த உலகம் உருவாக காரணம் கடவுள் தான், இறைவன் தான் இந்த பூமியை உண்டாக்கி, சகல உயிர்களையும் படைத்தான் என்று கூறுவது பொய்யான வாதம் ஆகும். படைக்கும் கடவுள் பிரம்மா, காக்கும் கடவுள் மகாவிஷ்ணு, அளிக்கும் கடவுள் சிவன் என்று கூறுவார்கள். இது பொய், பிரம்மா, மகாவிஷ்ணு, சிவன் என்ற மூவர் தெய்வ தத்துவம் பொய்யானது. இதை நம்பி அலைவதைவிட்டு விட்டு, உன் பிறப்பின் மூலத்தை அறிந்து உடல், உயிர், ஆன்மாவாக உள்ள நீ உனக்கு நிர்ணயிக்கப்பட்ட மூலத்தை, உன் விதியை, உன்னையே நீ அறிந்து வாழ்ந்து வந்தால் உனக்கு வாழும் போதே முக்தி உண்டாகும் என்கிறார்.
                     மூல வேற றிந்து கொண்டால் மூன்றுலகமும்
                     முன்பாகவே கண்டு நித்ய முத்தி சேரலாம்
                     சாலவேர றிந்தாலே தான் பயனுன்டோ
                     சகத்தைபொய் யென்றுதெளிந் தாடாய் பாம்பே.
                    ஒரு மனிதன் தான் பிறந்ததின் மூல காரணத்தை, தன் விதியை, ஊழ்வினையை தன் ஞானத்தால் தன்னையறிந்து கொண்டு, தான் வாழ வேண்டிய வழி முறையை கடைபிடித்து வாழ்ந்து வந்தால், வாழும் போதே மூன்று உலகமும் அடைந்து முக்தி நிலையை கொண்டவன் ஆவான். இப்படி தான்வாழும் கலை அறிந்த ஞானி தினம், தினம் முக்தி அடைந்த வாழ்வை பெறுவான். இதை விடுத்து இந்த பூமியில் சில பொய்யர்கள் கூறும், இறந்த பின் முக்தி நிலை என்ற பொய்யான பேச்சுகளை  கேட்டு கடவுள், பூசை, ஹோமம், தானம், தர்மம் என்று நம்பி அலைந்து கொண்டு, தன் வாழ்வினை இவைகள் உயர்த்திவிடும், முக்தியை தந்து விடும், என்று நம்பி அலைந்து கொண்டு இருந்தால் எந்த பயனும் கிட்டாது. எனவே இந்த பூமியில் கூறும் பொய்யான, கட்டு கதைகளை புரிந்து கொண்டு தன்னையறிந்து வாழ்தலே முக்தியை தரும்.

தொடர்ச்சி....       

Thursday, 11 April 2013

தொடர்ச்சி....


                  இந்த பூரண ஞானம் பெற்றவர்கள் உலகில் இயற்கையை ஆராய்ந்து, நமக்கு பல நல்லகருத்துகளை, ஞான மொழியாக கூறியுள்ளார்கள். இந்த பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு முன்பே, உலகில் பிறக்கும் உயிர்கள், உயிர் வாழ தேவையான அனைத்து பொருட்களும் இயற்கையினால் படைக்கப்பட்டு, அதன் பிறகு தான் மனிதரும், விலங்கினமும், தாவரமும் தோன்றியது. உலக உயிர்கள் சுவாசிக்க காற்று, பசிக்கு தானியம், தாகத்திற்கு தண்ணீர், வெளிச்சம், நோய் தீர்க்கும் மூலிகைகள், தங்கம் வெள்ளி, வைரம், பாறை, மலை, என இன்னும் எவ்வளவோ படைக்கப்பட்டுவிட்டன. இவைகளை அடைந்து அனுபவிக்க உயிர்களுக்கு கை, கால், மூளை, அறிவு என சாரீரம் அமைந்துள்ளது. ஒரு மனிதன் தன் சரியான அறிவு, முயற்சி கொண்டு, இவைகளை எவ்வளவு வேண்டும் என்றாலும் அடைந்து அனுபவித்துக் கொள்ளலாம் இதற்கு எந்த தடையும் கிடையாது. இவைகள் ஒருவருக்காக படைக்கப்படவில்லை என்பதை உணர்தல் அவசியம். இதை விடுத்து கடவுளை வணங்கினால் எல்லாம் கிடைத்து விடும் என்று வாழ்வது அறியாமை, ஞானமற்ற மனித நிலையாகும். பூமி தோன்றிய போது இயற்கையால் படைக்கப்பட்ட பொருட்களை தவிர புதிதாக ஒரு பொருளை எந்த ஒரு சக்தியாலும் பூமியில் உருவாக்கமுடியாது என்பதை அறிதலே மூல ஞானம். நிர்ணயிக்கப்பட்ட விதியை மாற்ற முடியாது என்பதை அறிதலே ஞானம்.
                    உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனின் பிறப்பும், வாழ்வும் எப்படி அமைந்துள்ளது. எதனை அடிப்படையாக கொண்டு பிறப்பு உண்டாகின்றது என்பதை என் குரு கூறுவதை கேளுங்கள்.
                    அவரவர் வினைவழி அவரவர் வந்தனர் 
                    அவரவர் வினைவழி அவரவர் அனுபவம் 
                    எவரெவர்க் குதவினார் எவரெவர்க் குதவிலர் 
                    தகையவர் நினைவது தமையுணர் வதுவே 
                                                                                                      என்று கூறுகின்றார்.
                    இந்த பூமியில் ஒவ்வொரு மனிதனும், முன்னோர்களால் வம்சத்தில் உண்டான பாவ, சாப, புண்ணியங்களை அனுபவித்து தீர்க்க, ஊழ்வினையை கழிக்க, இந்த பூமியில் பிறக்கின்றனர். அந்த ஊழ்வினைகளின் கணக்கின்படிதான், இந்த பிறவியில் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் நன்மை, தீமை, உயர்வு, தாழ்வு, பிரச்சனை, தடை, கஷ்டம், நோய் என, பலவிதமான அனுபவ நிகழ்வுகள் கொண்ட வாழ்க்கை அமைகின்றது. தன் ஊழ்வினையின்படியே பலன்களை வாழ்கையில் அனுபவித்து வருகின்றார்கள்.
                   எனவே இந்த பூமியில் பிறந்த ஒரு மனிதனோ, அல்லது தெய்வமோ, பூசை, ஹோமம், யாகம், மந்திரம், மணி வழிபாடு, விரதம், தானம், தர்மம், என எந்த ஒரு கிரியை செயல்களை செய்தாலும், இந்த ஊழ்வினை படி நாம் அனுபவிக்க வேண்டிய "பிராப்த விதியை" தடுத்து விடமுடியாது. பரிகாரம் என்ற பெயரில் செய்யும் சடங்கு, சம்பிரதாய, சாஸ்திர செயல்களால் ஊழ்வினை விதியை மாற்ற முடியாது. மற்ற எவரும் உதவி செய்து நம் ஊழ்வினையை மாற்ற முடியாது. ஆனால் ஒவ்வொரு மனிதனும் ஞானத்தினால் தன்னையறிந்து, ஞான நிலையுடன் வாழ்ந்தால் ஊழ்வினையை அறிந்து தடுத்துக் கொள்ள முடியும் "தன்னையறிதலே ஞானம்". இதுவே விதியை தடுக்கும் சக்தி.
                  ஒவ்வொரு மனிதனும் பிறப்பதற்கு முன்பே இந்த பிறவியில் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என ஊழ்வினையின் படி, விதி பயன் நிர்ணயித்த பின் தான் பிறக்கின்றான். இதனை "பிராப்த விதி" என்பார்கள். இந்த நிர்ணயித்த விதியை, தன்னை யறிந்தவன் தடுத்து நல் வாழ்வை அடைய முடியும். தன் விதியை தடுத்து கொள்ளும் வழியை அறிதலே ஞானம் என்கிறார்.
                  தத்துவ குப்பையை தள்ளுங்கடி வேத 
                                   சாத்திர பொத்தலை மூடுங்கடி 
                  முக்தி தருஞான வத்துவை வாவென்று 
                                   மூட்டி கும்மியடி யுங்கடி.

தொடரும்.....

Wednesday, 10 April 2013

தொடர்ச்சி...


               மேலும் சித்தர்கள் கூறுவதை கேளுங்கள் படித்தவர்கள் மட்டும்தான் ஞானம் அடைய முடியும் படிக்காதவன் ஞானம் அடைய முடியாது என்பதல்ல. படிக்காதவர்களும், இயற்கையில் தனக்கு பிறப்பிலேயே அமைந்துள்ள திறமையை சரியாக பயன்படுத்தி, ஞானத்தினை விருத்தி செய்து நல்வாழ்வு பெற்றவர்கள் ஏராளம். இதனை கேள்வி ஞானம் மூலம் பல கலைஞர்கள் புகழ் பெற்று உள்ளனர். அனுபவ ஞானம் மூலம் அரசியல் தலைவர்கள், வியாபாரிகள் என உலக புகழ் பெற்று உன்னத நிலையில் தானும் வாழ்ந்து, பிறரையும் வாழ வைத்தவர்கள் ஏராளமானவர்கள் உண்டு. இவர்கள் சிறு வயதில் சிரமம் அடைந்து இருந்த போதும், ஞான நிலை அடையும் பருவ வயது வந்த போது தன்னையறிந்து, தன்னிடம் உள்ள திறமையை சரியாக உணர்ந்து, அதனை செயல்படுத்தி வாழ்வில் உயர்ந்து விடுவார்கள். இவர்கள் தன் அறிவு, ஞானத்தை பயன்படுத்தி வாழ்வில் உன்னத நிலையை அடைந்தவர்கள் தானே தவிர, கடவுளை வணங்கி மந்திரம் கூறி வாழ்வில் புகழ் பெற்றவர்கள் அல்ல. கல்வி என்பது பருவ வயதிற்காக, உதாரணமாக கூறப்பட்டது என்குரு, ஞானிகளை பற்றி கூறும் போது
                 "சன்னியாசி யானவருள் மூடருண்டு
                                 சமுசாரஞ் செய்பவருள் ஞானியுண்டு" என்கிறார்.
                 கடவுளை வணங்கி, பக்திமான், மகான், என கூறிக் கொண்டு, காவி, கமண்டலம், ருத்ராட்சம், மதசின்னங்களை அணிந்து தன்னை பெரிய சக்தி உள்ளவர் போல காட்டிக் கொள்ளும், "குருமார்" என்று தன்னை கூறிக் கொள்ளும் மனிதர்களிலும், ஒன்றுமே தெரியாத முட்டாள்கள், பிறரை ஏமாற்றி பிழைப்பவர்கள் வேடதாரிகள் இருப்பார்கள். திருமணம் புரிந்து கணவன், மனைவி, குழந்தைகளுடன் இல்லற வாழ்கையில் ஈடுபட்டு இருக்கும் சம்சாரியிலும் அளவற்ற ஞானம் உள்ள ஞானிகள் இருக்கின்றார்கள் என்பதை புரிந்து கொள் என்கிறார். கடவுளை வணங்குபவர் ஞானி அல்ல, கடவுளை வணங்கினால் ஞானம் அடைய முடியாது என்கிறார்.
                 என்குரு அகப்பேய் சித்தர் கூறும்போது
                 சரியை யாகாதே                 -             அகப்பேய்
                 சாலோகங் கண்டாயே
                 கிரியை செய்தாலும்          -              அகப்பேய்
                 கிட்டுவ தொன்றில்லை
                 யோக மாகாதே                    -              அகப்பேய்
                 உள்ளது கண்டக்கால்
                 தேக ஞானமடி                      -               அகப்பேய்
                 தேடாது சொன்னேனே
                 தன்னை யறிய வேணும்  -               அகப்பேய்
                 சாராமற் சாரவேணும்
                 பின்னை யறிவதெல்லாம்-             அகப்பேய்
                 பேயறி வாகுமடி - என்கிறார்.
                 சரியை என கூறும் பூசை செய்தால் நீ சாவு உலகம் தான் காணமுடியும், கிரியை பூசை செய்வதால் உனக்கு ஞானம் கிட்டாது. யோக நிலையை அடைந்தேன், எல்லாவற்றையும் அறிந்தேன், சகல சாத்திரம், புராணம், அறிந்தேன் என்று பல உதாரண கதைகளை கூறி நீயே உன்னை "யோகி" என்று பட்டம் சூட்டி அழைத்து கொண்டாலும் ஞானம் கிட்டாது. ஞானம் அடைய தன்னையறிதல் வேண்டும். வேறு எந்த வேஷம் கட்டியும், கடவுளை பற்றிய விபரங்களை கற்றும், கடவுளை பற்றிய மந்திரம் சொல்லியும் பூசை, ஹோமம் செய்தாலும் அவைகள் எல்லாம் ஞான அறிவு கிடையாது. இந்த செயல்களை நம்பிக்கையுடன் செய்யும் நீ மனிதன் அல்ல, பேய் அறிவு கொண்ட  பேயின் நிலையில் வாழ்பவன் என்கிறார் என்குரு.
                  இன்னும் சித்தர் பெரு மக்களும், தவத்தில் சிறந்த முனிவர்களும், வள்ளலார், திருவள்ளுவர் போன்ற ஞானிகளும் ஞானத்தை பற்றி கூறும்போது இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு சீவனுக்கும் மனிதனுக்கும் சுயஅறிவு, ஆராயும் அறிவு, சமுதாய அறிவு, பிரபஞ்ச அறிவு, தன்னை அறியும் ஆன்ம அறிவு நிலை கொண்டு பிறப்பிக்கப்படுகின்றன. இது இயற்கையின் விதி. இதனை சரியாக புரிந்து, அறிந்து வாழ்பவன் தன்னையறியும் அறிவால், ஞான அறிவை அடைவான்.
                 தன்னையறியும் அறிவு உள்ளவன் தனக்கு உள்ளே மறைந்துள்ள சக்தியை தேடி அடைவான். உலகில் மனிதன் வாழ தேவையான தண்ணீர், தானியம், தங்கம், வெள்ளி, வைரம் போன்ற பொருட்களை எப்படி மண்ணை தோண்டி உள்ளே இருந்து எடுத்து மனிதன் நம்வாழ்வின் செயல்களுக்கு பயன்படுத்துகின்றானோ, அதைப் போன்று மண் என்று கூறப்படும் நம் தேகத்தின் உள்ளே கடந்து சென்று நம்மை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். நம்மை நாமே உள் கடந்து தன் அகத்தை ஆராய்ந்து தன்னை அறிவதே கடவுள் வழிபாடு ஆகும். இதை விடுத்து கோவிலில் கடவுளை வணங்குவது கடவுள் வழிபாடு அல்ல.
                இந்த பூமியில் நாம் எதற்காக பிறந்தோம். நாம் எந்த செயலை செய்தால் வாழ்க்கையில் உயர்வு அடைவோம், நம் வாழ்வில் எதனால் கஷ்டம், பிரச்சனை, வறுமை, உண்டானது. சரீரம் நோய் இல்லாமல் இருக்க எந்த உணவு வகைகளை உண்ண வேண்டும். எந்த உணவு வகைகளை நீக்க வேண்டும். நண்பர்கள், உறவினர்களில் நமக்கு நன்மை செய்பவர்கள் யார்? தீமை செய்பவர்கள் யார்? எந்த தொழில் செய்தால் நம் வாழ்வில் உயர்வு அடைவோம். நமது வம்சத்தில் வாழ்ந்த முன்னோர்களால் உண்டாக்கப்பட்ட பாவ, சாப, புண்ணியம் எது? இவைகள் நம் வாழ்க்கையில் "பிராப்தம்" என்ற  பெயரில் எப்படி பாதிப்பை உண்டு பண்ணுகின்றது? இந்த பூமியில் படைக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் மனிதன் அனுபவிக்கவா? அல்லது துறந்து விடுவதற்கா? தன்னிடம்  பிறப்பிலேயே உண்டான திறமை எது? இதனை எப்படி விருத்தி செய்து கொள்வது? இந்த உலகில் இயற்கையில் உருவானது எது? அதில் நிலையானது எது? மனிதனால் உருவாக்கப்பட்டு மறைவது எது? இப்படி தன் வாழ்விற்கு தேவையான ஒவ்வொன்றையும் ஆராய்ந்து, தனக்கு வாழ்வில் தீமை, கஷ்டம், நஷ்டம் இவைகளை உண்டு பண்ணும் செயல்களையும், பொருட்களையும், உறவுகளையும், நட்பையும், நீக்கிவிடுதல் வேண்டும். நம் வாழ்வின் உயர்வுக்கும், மேன்மைக்கும் நன்மை தருபவனவற்றை மட்டும் பயன்படுத்தி வாழ்பவன் ஞான நிலை அடைந்த ஞானி ஆவான். இதுவே தன்னை பற்றி பூரண ஞானம் அடைந்த நிலை. "தன்னையறிதல் ஞானம் " தன்னையறிந்தவனே ஞானி ஆவான்.
                   ஞானம் என்பது ஏதாவது ஒன்றை பற்றி மட்டும் தெரிந்து கொள்வது ஒரு வகை. இசையை மட்டும் நன்கு அறிந்து அதில் நிபுணராக இருப்பவர் இசை ஞானி, இவருக்கு வேறு ஒன்றைப் பற்றிய அறிவு இராது. கணிதத்தில் மட்டும் மேதையாக இருப்பவர் கணித அறிவை தவிர வேறு ஒன்றும் தெரியாதவராக இருப்பார். சாத்திரம் படித்தவர் தான் ஏட்டில் படித்த, பாடல்களை பற்றிய விளக்கமும், மந்திரங்களை இசையுடன் பாடும் வல்லமை பெற்று இருப்பார். வேறு ஞானம், உலகை பற்றிய தெளிவு இராது. இதைப் போன்று ஏதாவது ஒன்றை மட்டும் நன்கு தெரிந்து அதில் பொருள் சம்பாதித்து வாழ்ந்து வருபவர் ஒரு வகை ஞானம் பெற்றவர். ஆனால் பூரண ஞானம் என்பது மனிதன், உயிர், உடல், ஆன்மா, வைத்யம், வானியல், வாசி, ஜோதிடம், பஞ்சபூதங்கள், நவகோள்கள், என அனைத்தையும் அறிந்து, தெரிந்து, புரிந்தவரே, பூரண ஞானி இதுவே பூரண ஞானம். இந்த பூரண ஞானம் பெற்றவர் தான் "பூரண ஞானி" என்று அழைக்கப்படுவார். நமது தேசத்தில் பூரண ஞானம் பெற்றவர்கள் அகத்தியர், 18 சித்தர்கள், இராமலிங்க அடிகள், புலத்தியர், அத்திரி, பட்டினத்தார், பத்ரகிரியார், போன்ற இன்னும் பல ஞானிகள் உள்ளனர். இவர்கள் சகல கலா ஞானிகள் ஆவார்கள். இவர்கள் மரணம் இல்லாபெரு வாழ்வு பெற்று, இன்னும் சூட்சும தேகத்துடன் வாழ்ந்து, நம்மை வழி நடத்தி வாழ்வித்துக் கொண்டு இருகின்றார்கள்.


தொடரும்....

Monday, 8 April 2013

தொடர்ச்சி....


ஞானம் 
              இன்றைய உலகில் மக்கள் ஞான நிலையை அடைந்து விட, மிகவும் பிரயாசைப்பட்டு அலைந்து வருகின்றார்கள். பாரதம், புராணம், இதிகாச கதைகளை படித்தால், இவைகளை சொற்பொழிவுகள் கேட்டால் ஞானம் வரும், கடவுளை வணங்கி பக்தி செலுத்தி வாழ்ந்தால் ஞானம் உண்டாகும், இவைகளை கடைபிடித்து வாழ்பவன் தான் ஞானி, என்று மக்கள் எண்ணிக்கொண்டு இருக்கின்றார்கள். இது ஞானம் பெற வேதாந்தம் கூறும் வழி முறைகள் என்று கூறி வருகின்றார்கள். இன்றைய மக்கள் இந்த வேதாந்த முறையை கடைபிடித்தே இன்று ஞானத்தை தேடி, தேடி அலைந்து கொண்டு இருக்கின்றார்கள்.
                சைவ சித்தாந்த கொள்கையை நமக்கு அருளிய அகத்திய முனிவரும் அவரின் சீடர்களாகிய பதினெட்டு சித்தர்களும், ஞானம் என்றால் என்ன? இந்த ஞானம் எங்குள்ளது? ஞானம் அடைந்தவன் யார்? பூரணஞானம் அடையும் வழியாது? என எல்லாவற்றிற்கும் தெளிவான, குழப்பமில்லாத எளிதான வழியை கூறியுள்ளார்கள்.
                சித்தர்கள், ஞானம் பெற பக்தி மார்க்கம் உதவாது, கடவுளை வணங்கி வழிபட்டு வருவதால் ஞானம் உண்டாகாது. ஞான வாழ்வை பெற முடியாது என்று கூறுகின்றார்கள்.
                இன்று கலிகால மக்கள் ஞானம் அடையும் வழி என்று கூறிக்கொண்டு பூஜை, ஹோமம், யாகம் வேள்வி என்று கடவுளை வணங்கி அர்ச்சனை, அபிஷேகம், என செய்தல் மற்றும் நாம மந்திரம் கூறுதல், கூட்டமாக சேர்ந்து பசனை பாடல்களை பாடுதல் ஆன்மீகம் என்ற பெயரில் ஏதேதோ சடங்குகளை செய்தல், தீட்சை வாங்குதல், தீட்சை மந்திரம் கூறி ஜபம் செய்தல் என இன்னும் பல வழிகளில் ஞானம் அடைய, தன் முன்வினைகளை தீர்த்துக் கொள்ள பணம் பொருள், என செலவு செய்து அலைந்து வருகின்றார்கள். இது போன்ற செயல்களை மக்கள் தன் வாழ்வில் கடைபிடித்து வருவதால், இந்த வேதாந்த முறைகளை சார்ந்து செயல்பட்டு வாழ்வதால் ஞானம் அடையமுடியாது, நல்வாழ்வை பெறமுடியாது.
                 "தயங்காமற் பிழைப்பதற்கே இந்த ஞானம்
                 சார்வாக பாராட்டும் ஞானம் வேறே"
                 மக்கள் தயங்காமல், வாழ்வில் பாவம், சாபம், ஊழ்வினை பாதிப்பு இல்லாமல் ஞானம் பெற்று நல்ல வாழ்வை அடைய நான் வழி கூறுகின்றேன் என்கிறார் என் குரு அகத்தியர்.
                 இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும், பிறக்கும் போது ஒரு திறமையுடன் தான் பிறக்கின்றான். ஒவ்வொரு மனிதனிடமும் உள்ள தனிப்பட்ட திறமையே அறிவு என்றும், பாண்டித்தியம், திறமை என கூறுவார்கள். தன் தனிப்பட்ட திறமையை அறிந்து கொண்டு மேலும், மேலும் வளர்த்துக் கொண்டு உலகிற்கு வெளிப்படுத்துபவனை மற்றவர்கள் "மேதை" என்றும், "ஞானம் உள்ளவன்" என்றும் கூறுவார்கள். தன்னைப் பற்றி அறிதலே ஞானம், தன்னையறியும் அறிவு உடையவன் ஞானி ஆவான். இந்த ஞானம் என்பது பலவகைப்படும்.
                 கணிதம், விஞ்ஞானம், மருத்துவம், ஜோதிடம், வான் இயல், அரசியல், பேச்சு, இசை, நடிப்பு, எழுத்து, ஓவியம் என இது போன்று இன்னும் பல விதமான வகைகளில் மனிதனின் திறமை, ஆற்றல் உள்ளிருந்து செயல்பட்டு கொண்டு இருக்கும். ஒரு மனிதன் தன்னிடம் உள்ள ஆற்றலை அறிவை ஆதிமுதல் அந்தம் வரை ஆராய்ந்து நுட்பமாக உணர்ந்து அதனை மேலும், மேலும், விருத்தி செய்து கொள்வதே ஞானம் அடைதல் ஆகும். தன் திறமையை, உலக மக்கள் நன்மைக்காக செயல்படுத்தி வாழ்பவன் "ஞானி" என்று மக்களால் போற்றி புகழப்படுவான்.
                 ஞானம் என்பது பிறக்கும் போதே நம்முடன் உருவாகி வந்த திறமை அறிவு என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தையின் சிறு வயதில் ஞானம் தான் முதலில் வெளிப்படும். சிறு வயது குழந்தைகள் பெற்றோர்களை, பெரியோர்களை பார்த்து, தன் கண்ணில்படும் ஒவ்வொரு பொருளை பற்றியும், அவை சம்பந்தமான விபரங்களை ஏன்? எப்படி? எதனால்? என்று கேள்வி மேல் கேள்வியாக கேட்டு கொண்டு இருக்கும். இது உலகில் தன் பார்வையில் பட்ட, உருவங்களை பற்றிய ஆராய்ச்சி குணம், அவைகளை பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளும் ஆர்வம், இந்த கேள்வி கேட்கும் செயலே ஞானம் உந்துதல் நிலை என்ற முதல் நிலையாகும். எவன் ஒருவன் ஒரு பொருளின் மூலாதாரத்தை அறிந்து கொள்ள முயற்சித்து கேள்விகள் கேட்கின்றானோ அவன் மூலாதார உண்மையை அறிந்து கொள்ள அதைப் பற்றிய தெளிவினை அடைய, ஞான முயற்சியில் ஈடுபட்டு விட்டானே என உணர்தல் வேண்டும். இது ஞானம் வெளிப்படும் நிலையாகும். இதனை சந்தேகம் தெளிதல் என கூறலாம். ஆனால் பெற்றோர்களும், பெரியோர்களும், இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், அல்லது இவர்களுக்கே பதில் சொல்ல தெரியாமல் குழந்தைகளை அடக்கி விடுவார்கள். இன்னும் சில பேர் புராண, இதிகாச கதைகளை, மாய மந்திர கதைகளை கூறி, தெளிவான உண்மை விளக்கத்தைக் கூறாமல் குழந்தைகளின் ஞானம்வெளிப்படுத்தலை, ஆராயும்திறனை ஆரம்பத்திலேயே முடக்கி விடுகின்றார்கள். இதனால் குழந்தைகள் இளம் வயதிலேயே உண்மையை அறிந்து கொள்ள முடியாமல், தன் ஞான நிலையை வெளிப்படுத்தி கொள்ள முடியாமல் போவதற்கு பகுத்தறிவு இல்லாத பெற்றோர்களே காரணமாகி விடுகின்றார்கள்.
                ஒரு குழந்தை பிறந்தது முதல் 5ம் வகுப்பு கல்வி பெறும் வயது வரை பிறரை சார்ந்து வாழும் பருவ வயது காலம், பற்றுதல் என்ற பக்தி நிலை வயது காலம் என்று கூறினோம். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மேல்நிலை கல்வி பயிலும் கால பருவ ஞானநிலை உதிக்கும் காலம் எனலாம். இந்த பருவ வயது காலத்தில் சரீரம், மனதில் முதிர்ச்சி தோன்றக் கூடிய காலம் ஆகும். இந்த 12 வயதிற்கு மேல் தான் ஒருவர் தன்னிடம் உள்ள தனிப்பட்ட திறமையை, சக்தியை அறிந்து, தன் எதிர்கால வாழ்வின் உயர்வுக்கு வழி அமைத்துக் கொள்ள ஆரம்ப காலம் ஆகும். இந்த பள்ளி படிப்பு காலத்தில் தான் கணிதம், இரசாயணம், கலை, மருத்துவம், இசை என, மனிதன் தன் திறமையை உணர்ந்து, அந்த கல்வியை சிறப்பு பாடமாக பெற்று, அதில் மேன் மேலும் நுட்பங்களை அறிந்து, அதில் ஞானம், திறமை அடையும் காலமாகும். தன் திறமையை அறிந்து, அதனை விருத்தி செய்து, தன் எதிர்கால வாழ்விற்கு அடிகோலுகின்றான். இப்படி தன் தனிப்பட்ட அறிவை சரியாக அறிந்து வளர்த்துக் கொண்டவன் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவன் ஆவான். இவன் தன் எதிர்கால நல்வாழ்விற்கு சரியான வழி அமைத்துக் கொண்டவன், தன் வாழ்வில் யாரையும் நம்பி வாழாமல் தானே சுயமாக வாழும் தகுதியை பெற்றவன் ஆகின்றான். ஒருவன் தன் திறமையை தன் சுய அறிவால் அறிந்து, அதனை விருத்தி செய்து தேர்ச்சி பெற்றவன், அந்த துறைகளில் புகழ் அடைவான். கணித மேதை, விஞ்ஞானி, சாத்திர ஞானி, இசை ஞானி, மருத்துவ ஞானி, பண்டிதன், கலைஞானி, என நிபுணன், ஞானி, மேதை என மற்றவர்களால் புகழப்படுவான். இதுவே மனிதன் ஞானம் அடையும் நிலை, ஞானியான நிலை. இவன் தன்னிடம் உள்ள இயற்கையான திறமையை அறியாமல், கடவுளை மட்டும் வணங்கி பூசைகள் செய்து கொண்டிருந்தால் இவனின் ஞானம் வெளிப்பட்டு இராது, தன் திறமையை உணராமலே, வாழ்வில் பிறரை நம்பியே வாழ வேண்டிய நிலையில் வாழ்க்கை அமைந்துவிடும். கடவுளை வணங்கி பக்தி செலுத்துபவன் ஞானி இல்லை.


தொடரும்....

Saturday, 6 April 2013

தொடர்ச்சி.....
                 உலகினில் பிறந்த எந்த மனிதனும் தன் சுய அறிவு செயல்பட தொடங்கும் வரை, தானே சிந்திக்கும் திறன் உண்டாகும் வயது வரை, தன் முன்னோர்கள் கூறும் கருத்துகளை ஏற்றுக் கொண்டு தான் வாழ வேண்டும். இது பல பருவம் ஆகும். அதாவது ஒன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயிலும் வயது நிலை ஆகும். இந்த பருவம் பிறர் கட்டுபாட்டில் வாழ்ந்து, பிறர் கூறுவதை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ள காலம். இந்த அறியாப் பருவத்தில் செய்யும் எந்த செயலையும் மனிதன் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து செய்வது இல்லை. பக்தி என்பது இதைப் போன்ற ஒன்றுதான்.
                 உலகில் பிறந்த அனைவரும் தன் ஆரம்ப வயதில் இறைவழிபாடு, கடவுள்பக்தி என்ற நிலையை, அது எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டு, ஈடுபட்டு வாழ்ந்தே ஆக வேண்டிய நிலைதான். இது காலம், காலமாக சமுதாயத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
                 என் குரு சிவவாக்கிய சித்தர் தன் இளம் வயதில் ஞானம் அடைய, தன்னையறிய பக்தி தான் உண்மையாக உதவி செய்யும் என்று நம்பிக்கை கொண்டு இராமனே தெய்வம், "ராம நாம மந்திரம் ஞானம் தரும், முக்தி தரும்" என்று ராமனை வணங்கி வாழ்ந்து வந்தார். பின் இந்த ராம பக்தி மார்கத்தினால் எந்த பலனும் கிட்டாது என்று தெளிந்து "ராமன் என்பதும் பொய், ராமநாம மந்திரம் பொய்" என்று கூறிவிட்டு சிவனை வணங்கி எல்லாம் சிவாயமே என்றார். ஐந்தெழுத்தே ஆன்மாவை அறிய உதவும், சிவனே பெரிய தெய்வம் என்று சிவபக்தி கொண்டு வாழ்ந்தார். இதனாலும் ஆன்மாவை அறிய, தன்னையறியும் நிலை ஏற்படாது என்று அறிந்து "மூல மந்திரம் என்பதும் பொய், மூவரும் பொய்" என்று சிவனை வழிபடுவதை விட்டார். அதுபோல் வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகள் இளம் வயதில் தெய்வங்களை வணங்கி பக்தி செலுத்தி நிறைய பாடல்களை பாடினார், கடைசியில் ஒளி வழிபாட்டை உருவாக்கி, சித்தர்கள் அருளிய "சைவ சித்தாந்த கொள்கைகளை" ஏற்று மகா ஞானம் அடைந்தார். வள்ளலார் கூட இளம் வயதில் வேதாந்த மார்க்கத்தினை ஏற்று கடவுளை வணங்கி வந்த போது சித்தர்கள் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாமல், சித்தர்களை குறைவாக மதிப்பிட்டு சில பாடல்களை பாடியுள்ளார் ஆனால் வாழ்நாளில் கடைசி காலத்தில் சித்தர்கள் கூறிய வழியில் வாழ்ந்து அகத்தின் உள்ளே சோதி தரிசனம் பெற்றார். இவர்களை போன்று பட்டினத்தாரும் பக்தி நிலையை விட்டு, சித்தாந்த கருத்தை ஏற்றார். இதைப் போன்று சாகாநிலை பெற்று தன்னை மறைத்துக் கொண்ட அனைத்து ஞானிகளும், சித்தர்களும் மகான்களும் பக்தியை விட்டு கடவுள் வழிபாட்டினை நீக்கி சித்தர்கள் கூறிய சித்தாந்த கொள்கையை கடைபிடித்து வாழ்ந்து தன்னையறிந்தவர்கள்.
                  அனைத்து ஞானிகளும், மகான்களும் இளம் வயதில் ஆரம்ப காலத்தில் கடவுள் பக்தி கொண்டு கடவுளை வணங்கி, மாயையின் வசம் ஆட்பட்டு, பாட்டுபாடி அலைந்தவர்கள்தான் இதனை மறுக்க முடியாது. இந்த மகான்களும், ஞானிகளும் அறிவின் முதிர்ச்சி உண்டாகி, வாழ்வின் அனுபவத்தின் மூலம் விழிப்புணர்வு பெற்று 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 6ம் வகுப்பு செல்பவர் 5ம் வகுப்பு பாடத்தை விட்டதுபோல் பக்தியை விட்டனர். தன்னையறியும் நிலையை பெற முயற்சித்தனர். உருவ வழிபாட்டை ஒதுக்கினார்கள். பூசை, ஹோமம், யாகம், அர்ச்சனை, அபிஷேகம், கடவுளை போற்றி பாடுவது போன்றவைகளை விடுத்து, வாசி யோகம் பயிற்சி மூலம் தன் சக்தியை வளர்த்தனர் ஞானம் கிட்டியது ஆத்மா சோதி பிரகாசித்தது. இவர்கள் இன்றும் உலகிற்கு வழிகாட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்.
                   இன்றைய மக்கள் பட்டினத்தாரும், சிவவாக்கியரும், இராமலிங்க சுவாமிகளும் தாங்கள் அறியாத இளம் வயதில் பாடிய கடவுள் பக்தி பாடல்களை மட்டும் படித்து விட்டு, இந்த மகான்கள் கடவுளை வணங்கியே ஞானமும், முக்தியும் அடைந்தனர் என்று தவறாக எண்ணி வாழ்கின்றார்கள். இவர்கள் பூரண ஞானம் பெற்ற பின் பாடிய பாடல்களை யாரும் படிப்பது கிடையாது. இவர்கள்பாடிய கடவுள்பக்தி பாடல்களையே பத்திரிகைகளும், தொலைகாட்சியும், பட்டிமன்ற பேச்சாளர்களும், பசனை குழுவினரும் இன்னும் பாடிக் கொண்டு மக்களை ஞானம் பெற விடாமல் தடுத்து வருகின்றார்கள். பட்டினத்தாரின் பூரணமாலை படியுங்கள். சிவவாக்கியரின் ஞான பாடலை படியுங்கள். வள்ளலாரின் ஆன்மஜோதி தத்துவ பாடல்களை படியுங்கள் அப்போது தான் ஞானம் அடைய வழி கிட்டும் முக்தி அடையும் முயற்சியில் வெற்றி கிட்டும்.
                  இன்றைய மக்கள் பக்தி என்று கூறிக் கொண்டு, தன்னையறிந்து வாழ்வில் உயர வேண்டும் என்ற முயற்சி இன்றி கடவுள் அருளால் எல்லாம் நடக்கும், பூசை, ஹோமம், தானம், தர்மம், விரதம் இருந்தால், மந்திரம், நாமபாரயணம் செய்தால் எல்லாம் வாழ்வில் கிடைத்து விடும், தடைகள் விலகிவிடும், வாழ்வில் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்று நம்பி வாழ்கின்றார்கள். இந்த பக்தி நிலைப்பாட்டில் வாழும் மக்கள் இன்னும் ஆரம்பபள்ளி பாடத்தையே படித்துக் கொண்டு இருப்பவர்கள் என கூறலாம். இது போன்ற அடிப்படை ஞானமே இல்லாமல் மக்கள் பக்தி ஒன்றையே நம்பி கடைபிடித்து வாழும் மக்கள் இன்றைய உலகில் 90% சதவீதம் பேர்கள் உள்ளனர். இவர்கள் வாழ்வில் மேன்மை அடைய பக்தி நிலையை விட்டு ஞான நிலை கல்விக்கு உயர்தல் வேண்டும்.
                   என்குரு அகத்தியர் பக்தி என்று கூறிக் கொள்ளும் சாத்திரம், புராணம், ஆகமம் இவைகளால் எந்த நற்பலனும் கிடைக்காது என்பதை கூறுவதைக் கேளுங்கள்.
                   வேதமென்ற ஆகமங்க ளாறு சாத்திரம்
                                    வெவ்வேறு மதபேதம் சமய பேதம்
                    காதமென்ற சாதியும் நாள் பதினெட்டாகக்
                                     கருத்துவமா யுலகோரை மயக்கங் காட்டிக்
                    கீதமென்றா லரிகீதம் சிவகீத மென்றும்
                                     கிருபையுடன் வெவ்வேறாய் பிரித்துக் காட்டிப்
                    பாதமென்று சாவதுவே நிசந்தா  னென்று
                                      பாடினார் சாத்திரத்தை பாடினாரே-என்கிறார்.
                    நான்கு வேதம், ஆறு சாத்திரம், ஆகமம், பல மதம், சாதி, சமயம் பதினெட்டு புராணங்கள், அதற்கு விளக்கம் தரும் அகராதி நூல்கள், இவைகள் எல்லாம் இந்த உலகத்தில் உள்ள மக்களை மயங்க செய்வதற்காக, புத்தி, அறிவு மழுங்க செய்வதற்காக உண்டாக்கப்பட்டது. மேலும், அரிஎன்ற பெருமாளைப்பற்றி வைஷ்ணவர்களுக்கு ஒரு மந்திரம், சிவனுக்கு ஒரு மந்திரம், இது போல் வெவ்வேறு தெய்வங்களுக்கும் பூசை, அபிஷேகம் என ஆகமமுறைகள். இவைகள் சரியாக கடைபிடிக்கவேண்டும் என்று கூறி அப்படி கடைபிடித்து வணங்கி வந்தாலும் வாழ்வில் கஷ்டம், பிரச்சனை வறுமை தீராது. பிறந்தவர்கள் இறந்து போவது மட்டும் உண்மை என்று கூறிவிட்டார்கள். இதுவே கடவுளை வணங்குவதால் உண்டாகும் கடைசி பலன் இந்த வேதாந்தம் கூறும் கடவுள் வழிபாடு உன்னை மரணத்தில் இருந்து காப்பாற்றாது, ஞானம் அடைய உதவாது. தன்னையறியும் நிலையை தராது என்கின்றார் என் குரு அகத்தியர்.


தொடரும்......

Thursday, 4 April 2013

சித்தர்கள் கூறிய பக்தி, ஞானம், முக்தி, தெளிவு


பக்தி
             பக்தி என்ற சொல்லிற்கு ஒரு சீவன், வேறு ஒரு பொருளின் மீது, அல்லது வேறு ஒரு சக்தி மீது முழு நம்பிக்கை கொண்டு, அதனை ஆதாரமாக பற்றி கொண்டு வாழ்வது, அதாவது தன்னைத் தவிர, வேறு ஒன்றை பற்றி கொள்வதை பக்தி என்று கூறலாம்.
             இன்றைய மனிதர்கள் பக்தி என்ற பெயரில் பல விதமான வழிமுறைகளை கடைபிடித்து வாழ்கின்றார்கள். கடவுள் வழிபாடு, இறை வழிபாடு, குரு வழிபாடு என வழிபாட்டு முறைகளை பக்தி என்று கூறிக் கொள்கின்றார்கள். கடவுளை வணங்கி, பக்தி செலுத்தினால் வாழ்வில் நன்மை உண்டாகும், தான் செய்யும் எல்லா செயல்களிலும் வெற்றி கிடைக்கும் என்று நம்பி வாழ்பவர்கள் கடவுள் பக்தி கொண்டவர்கள் என்ற பிரிவினர்.
             சிலர் தன் குடும்பத்து முன்னோர்கள், தாய், தந்தை, பெற்றோர்களை வணங்கி அவர்களின் ஆசீர்வாதம், அனுகிரகம் நம்மை காப்பாற்றி, வாழ்வில் உயர்வை தரும், என முன்னோர்களை வழிபாடு செய்து வருபவர்கள் முன்னோரை வழிபடும் பிரிவினர்.
              சிலர் குரு என்று ஒருவரை ஏற்றுக் கொண்டு, குருவின் அருளாலே தன் வாழ்வு வெற்றியும், மேன்மையும் அடையும், என்று குருவை வழிபட்டு, வருபவர்கள் குருபக்தி குருவழிபாடு கொண்டவர்கள். இது போன்று தன்னைத் தவிர வேறு ஒன்றினை பற்றி பக்தி செலுத்தி வாழ்ந்து வருபவர்கள் இன்றைய மனிதர்கள்.
             இதில் கடவுள் பக்தி கொண்டவர்கள் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதும் சைவம், வைணவம் என்ற பேதம் கொண்டு ஒரு மதத்திற்கு ஒரு கடவுள், ஒரு கொள்கை, மந்திரம், நாம பாராயணம், பூசை முறைகள், என மதசின்னங்களை தனித்தனியே அமைத்துக் கொண்டு, அவரவர் செய்யும் ஆகம முறையே உண்மையான பக்தி என்று கூறிக் கொள்கின்றார்கள். இன்னும் சில மனிதர்கள் கணபதி, முருகன், காளி, சக்தி, அய்யப்பன் என கடவுளை தனித்தனியாக பிரித்து, அவரவர் மனத்திற்கு பிடித்த தெய்வ உருவங்களை வணங்கி பக்தி என்ற கூறிவருகின்றார்கள். இவர்களில் சில பேர், தான் வணங்கும் தெய்வங்களின் அருள், அனுகிரகம் பெற்று உள்ளோம், என கூறி உபாசகர், அடியார் என்ற பட்டத்தை தாங்களே வைத்துக் கொள்கின்றார்கள். சக்தி உபாசகர், முருகன் உபாசகர், அனுமன் உபாசகர் என தன்னை கூறிக் கொள்கின்றார்கள். இது போன்றவர்கள் தாங்கள் வணங்கும் தெய்வங்களே பெரிது, சக்தி வாய்ந்தது என்று கூறி தெய்வங்கள் இடையே ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தி விடுகின்றார்கள். சிலர் கடவுள் பக்தி என்று கூறி கொண்டு, கடவுளை வணங்கும் போது தன் முன்னோர்கள் கூறியுள்ள முறைகள் என்று கூறி கடவுளை வழிபட்டு வருகின்றார்கள். இவர்கள் உருவ வழிபாட்டினை பெரிதாக செய்து வருபவர்கள். இந்த பக்தி செலுத்தும் முறை உலக மக்கள் இடையே தேசத்திற்கு, தேசம் மாறுபட்டே காணப்படுகிறது. இறைவழிபாடு உலகில் ஒன்று போல் அமைந்து இருக்கவில்லை. ஒவ்வொருவரும் தன் சிறுவயதில், தன்முன்னோர்கள் கூறிய வழி காட்டுதல்படி ஏதாவது ஒரு கடவுளை வழிபட்டு வந்த போதும் வயது முதிர்ச்சி அடைந்து தானே சுயமாக சிந்திக்கும் அனுபவமுதிர்ச்சி நிலை ஏற்படும் போது அவரவர் விருப்பத்திற்கும், தன் மனத்திற்கும் பிடித்த வேறு ஒரு கடவுளை வழிபடும் சூழ்நிலையும் காணப்படுகின்றது. இன்னும் சிலர் தான் பிறந்த மதங்களையே மாற்றிக் கொண்டு வேறு மத வழிபாட்டு முறைகளை கடைபிடித்து வாழ்ந்து வருபவர்களும் உண்டு. இது போல் கடவுள் பக்தி அடிக்கடி மாற்றி கொள்ள கூடியதாக உள்ளது.
               மனிதர்களின் மனம் புத்தி மாறும் போதும், மனிதர்களின் எதிர் பார்ப்புகள் நிறைவேறாத போதும், தான் வணங்கும் கடவுளிடம் எதாவது ஒரு காரியம் நிறைவேற பிரார்த்தனை செய்து, அந்த காரியம் நடக்காத போதும் இதுவரை தான் பக்தி செலுத்தி, நம்பிக்கை வைத்து வணங்கிய கடவுளின் மீது நம்பிக்கை மாறுவதும் உண்டு. இந்த கடவுள் பக்தி என்பது நிலையானது அல்ல. இது மனம் மாறும் போதெல்லாம் மாறிக் கொண்டே போகும். எனவே இந்த பக்தி என்பது "மாயை" என கூறுவார்கள். இது மாயா தத்துவத்தை சேர்ந்தது. ஒரு மனிதன் தன் வாழ்வில் தன்னையறியாமல், பிறசக்திகளின் துணை கொண்டு பூசை, ஹோமம், யாகம், மந்திரம், அர்ச்சனை, அபிஷேகம் என வேறு ஒன்றின் துணையை நாடி தன் வாழ்வின் எல்லா பிரச்சனைகளையும், தடைகளையும் தீர்த்துக் கொள்ளலாம் என மனம் நம்பிக்கை கொள்ள செய்வதே மாயையின் முதல் செயலாகும். இது போன்ற எண்ணம் கொண்டவர்கள் மாயாவாத நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் என கூறலாம்.
               இன்னொரு பிரிவு மக்கள் குருபக்தி கொண்டவர்கள். இவர்கள் எதாவது ஒரு பீடாதிபதியையோ, அல்லது மாடாதிபதியையோ, தன் முன்னோர்கள் கூறிய "வம்ச குரு" என்று ஓருவரை குருவாக ஏற்றுக் கொண்டு, அந்த குரு மீது முழு நம்பிக்கை கொண்டு தன் வாழ்வின் எந்த ஒரு செயலை செய்யும் முன் அந்த குருவிடம் வாக்கு கேட்டு அதன்படி எதனையும் செய்து வருவார்கள். தாங்கள் குருபக்தியை வெளிப்படுத்த குருவின் காலில் வீழ்ந்து வணங்கியும், குருவின் மடத்திற்கு சொத்து, பொருள், என தானம் கொடுத்தும் வருபவர்கள் குருபக்தி உடையவர்கள்.
               இவர்கள் வணங்கும் குரு என்பவர், தன்னை நம்பிவரும் மக்களிடம் வேதம், சாஸ்திரம், புராணம் இவைகளில் இருந்து ஏதாவது ஒரு கடவுளை வணங்க சொல்வார்கள். இவர்கள் தன்னை நம்பும் பக்தரின் கஷ்டங்களை தன் சுய சக்தியால் நீக்கும் திறன் அற்றவர்கள். இன்னும் சில குரு என்பவர்கள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு ஏதாவது ஒரு பொருளை வரவழைத்து கொடுத்து தன்னிடம் ஏதோ சக்தி இருப்பதாக வெளிப்படுத்தி, தன்னை நம்பும்படி செய்து விடுவார்கள். காலி காலத்தில் சொத்து, போகம், பொருள்கள், பெண்கள் மீது ஆசை கொண்ட குருமார்களே அதிகம் இருப்பார்கள், என என் குரு கொங்கண சித்தர் கூறுவதை கேளுங்கள்.
                 மடையரப்பா வெறும் வீணர் சாம்பல் பூசி
                             மாடுபோற் ரிறிந்தலையு முலுத்தர் கோடி
                 சடையரப்பா சிலபேர்கள் தீனியாசை
                             சமுசார மாயை யிலேலலைவார் கோடி
                 அடையாளஞ் சொன்னாலு மறிய மாட்டார்
                             அறிவிலாச் சவங்கலென் றசென்மங்கோடி
                 உடையாளி வந்தாற் போற் பூசை செய்வார்
                              உருளுவான் குருக்களென்ன்பான் குருட்டுமாடே.
என்று இவர்களின் உண்மையான குணத்தையும், உள்நோக்கத்தையும், ஏமாற்றி பிழைக்கும் தன்மையையும் தெளிவாக கூறி, இவர்களை நம்பி குருபக்தி கொண்டு அலையும் மக்கள் அறிவில்லாத பிணத்திற்கு சமமானவர்கள் என்று  கூறுகின்றார். இது போன்ற குருமார்களை நம்பும் மனிதர்கள் ஒன்றுமே தெரியாத, கண் தெரியாத குருட்டு மாட்டிற்கு ஒப்பானவர்கள் என்கிறார்.
               இந்த போலி குருமார்களை பற்றி என்குரு பதஞ்சலியார் கூறுவதை கேளுங்கள்.
               மருகினார் சிலது பேர் வாதவித்தை
                            வந்தவர்போற் சொல்லியவம் பிளைப்போ மென்று 
               உருகினார் யோக தண்டு காசாயங்கள்
                            யோக நிட்டை பெற்றவர்போ லுருக் கொள்வாரே
               கொள்ளுவார் செபமாலை கையிலேந்திக்
                            குறடுமிட்டு நடை நடப்பார் குகையிற் காப்பார்
               விள்ளுவார் வாதமொடு யோக ஞானம்
                             வேதாந்தம் அதீதம் விசாரித்தாற் போலத்
                துள்ளுவாரு பதேசம் செய்வோ மென்பார்
                             சூதமணி கட்டுகிறேன் தொழிற் பாரென்பார்
                தள்ளுவார் பொருளாசை நமக்கே யென்பார்
                              சவுக்கார குருமுடிக்கத் தனமென்பாரே.
                இது போன்ற குணம் கொண்டு மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நபர்கள் தான் கலி காலத்தில் தன்னை "குரு" என்று கூறிக்கொண்டு அலைவார்கள். இன்றைய மக்கள் இந்த போலி குருமார்களை நம்பி ஏமாந்த பிறகே புரிந்து கொள்கின்றார்கள்.
                 இந்த குரு பக்தியும், இறைபக்தியும் தன் வாழ்வில் பிரச்சனைகளை தீர்க்க, நல் வாழ்வு அடைய உதவாது இவை எல்லாம் மாயை செய்யும் ஏமாற்று வித்தைகள் ஆகும் என்கிறார்.
                               

Tuesday, 2 April 2013

 தொடர்ச்சி ........
                    நமது ஞான சித்தர்கள் "அகத்தில் உள்ள ஆன்மாவை அறிதலே ஆன்மீகம்" என்று கூறுகின்றார்கள். "தன்னையறிதலே ஆன்மீகம் அறியும் பாதை" என்று கூறுகின்றார்கள். தன்னையறிதல் என்பது தன் குணம், மனம், நடத்தை இவைகளை அறிந்து சரிபடுத்தி கொள்ளுதல் தன் வாழ்வின் பிரச்சனைகளை தானே தீர்த்துக் கொள்ளும் சக்தியை அடைதல், தன் ஊழ்வினை விதியை அறிந்து வாழ்தல், வாழ்வில் வீழ்ந்து விடாமல் காத்துக் கொள்ளுதல் உலகில் பொய்மையை அடையாளம் காணுதல், உண்மையை அறிதல், புரிதல், தெளிதல், என்ற நிலைப்பாட்டுடன் வாழ்தல், போலி நபர்களை, அடையாளம் கண்டு விலக்குதல், போன்ற செயல்களை, சரியாக அறிவின் திறத்தால் தன் வாழ்வில் அறிந்து கொள்ளுதலே ஆன்மீக வெற்றியாகும்.
                   இதைவிடுத்து ஆன்மீகம் என்ற பெயரில் இன்று உலகில் உலாவரும் போலி குருமார்கள், ஞான, யோக பயிற்சி தரும் நிலையங்கள் வைத்து பணம் பறிக்கும் நபர்கள், பக்தி என்ற பெயரில் ஏமாற்றி திரியும் ஆனந்தாக்காள், சாமியார்கள், பாவ, சாபவினை தீர்க்கின்றேன், வாழ்வில் தடை நீக்குகின்றேன், விதியை மாற்றுகின்றேன் என்று அருள்வாக்கு, ரிஷிவாக்கு, சித்தர் வாக்கு என கூறும் நபர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள் பணம், பொருள் கொடுத்து ஏமாறாதீர்கள்.
                    ஆன்மீகம் என்பது கடவுள் கடவுள் பக்தி, வழிபாடு, திருவிழா, பூசை, ஹோமம், யாகம், மந்திரம் கூறுவது, அல்ல. பல பேர் சேர்ந்து கூட்டு வழிபாடு செய்வது அல்ல. இவைகள், உண்மையான ஆன்மீக வழி அல்ல. ஆன்மீகம் என்பது தனி மனித முயற்சி ஆகும். தன்னையறிதலே ஆன்மீகம் அகத்தில் உள்ள ஆன்மாவை அறிவதே ஆன்மீகம்.
                     அகத்தில் உள்ள ஆன்மா இருள், மருள், தெருள், அருள் என்ற நான்கு நிலைகளை உடையது.
1. ஆடம்பர ஆன்மீகம், அலங்கார ஆன்மீகம் என்ற பக்தி நாட்டம் கொண்டவர்கள் இருள் நிலையில் வாழும் மக்கள்.
2. அச்சுறுத்தல் ஆன்மீகம், அவலட்சணம், அலங்கோல ஆன்மீகப் பாதையில் வாழ்பவர்கள் மருள்நிலையில் வாழும் மக்கள்.
3. போலியான ஆன்மீக செயல்களை செய்யாமல், தன்னை மட்டுமே சிந்தித்து வாழ்பவர்கள் தெருள்நிலை மக்கள் என கூறலாம். ஆனால் ஞானம் என்பது இவர்களிடம் இராது.
4. தன்னியறிந்து வாழ்பவர்கள், இயற்கையின் உண்மை தத்துவத்தை புரிந்து வாழ்பவர்கள். அருள் நிலையில் வாழ்பவர்கள். இவர்களால் உலகம் நன்மை பெற்று நாட்டையும், மக்களையும் நன்மையடைய செய்வார்கள். இந்த பூரண ஞானம் பெற்றவர்கள். இந்த பூரண ஞானம் பெற்றவர், ஆன்மாவை அறிந்த ஞான மனிதர் தன்னை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். விளம்பரபடுத்தி கொள்ள மாட்டார்கள்.
                      ஆன்மாவை அறிய அறிய போலி குருமார்கள் விலக்கி, பதினெட்டு சித்தர்கள் அருளிய "சைவசித்தாந்த கொள்கைகளை" கடைபிடித்து இருள்நிலை நீக்கி, மருள் குணம் மாற்றி, தெருள் நிலை உணர்ந்து, அருள் ஞான வழியில் வாழ்ந்தால், அகத்தில் உள்ள ஆன்மா நம்முடன் பேசும். ஆன்மீக முயற்சி வெற்றி கிட்டும், வாழ்வில் பேரும், புகழும், செல்வமும் குறையாது கிட்டிடும். ஆன்மா வழிகாட்ட ஆரம்பித்து விட்டால் விதிவிலகும் அரசனை போன்ற வாழ்வு அமையும்.
                        அன்பர்களே சித்தர்கள் காலமாக இருந்தாலும், இன்று நாம் வாழும் காலமாக இருந்தாலும் "ஆன்மீகம்" என்பது ஒரு மனிதன் தன்னுடைய ஆன்மாவை அறிந்து கொள்வது தான். தன்னையறிதலே ஆன்மீகம் ஆகும். தன்னை அறிந்து கொள்ள தமிழ் தேச சித்தர்கள் அருளிய "சித்தாந்தம்" ஒரு பாதையை காட்டுகின்றது. வடநாட்டைச் சேர்ந்த, வேதம் படித்து, வேத வழிபடி வாழும் மக்கள் கூறும் "ஆரிய வேதாந்தம்" ஒரு வழியை கூறி இதுவே ஆன்மீக பாதை என்று கூறுகின்றது.
                          தமிழ் தேசத்தை சேர்ந்த பதினெட்டு சித்தர்கள் கூறும் சைவ தமிழ் சித்தாந்த கோட்பாடுகள், ஆன்மாவை அறிய கூறும் வழிமுறை, நெறிமுறைகள், தற்போது கடவுள் பக்தி இல்லாத, நாத்திக கொள்கை கொண்டவர்கள் கூறுவது போன்ற, கருத்துக்களை கொண்டது போல் தோன்றும் வேதாந்தம் கூறிய வழியில் வாழ்ந்து, கடவுளை வழிபடுவோர் ஆன்மீக வாதி என்றும் "ஆரிய வேதாந்த கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாமல் வாழ்பவன்" நாத்திகவாதி வாதி என்றும் தற்காலத்தில் மக்களிடையே கூறப்பட்டு வருகின்றது.
                         இந்த நாத்திகம், ஆத்திகம் என்ற பெயர், பிரிவினை வாதங்கள் இடைப்பட்ட காலத்தில், பிற்காலத்தில் சுயநலமிக்க சிலர், தங்கள் சுயநலத்திற்காக மக்களை பிரித்து வைத்த சூழ்ச்சியான செயல் ஆகும். வேதம், புராணம், சாத்திரம் என மாயாவாதங்கள் பேசும் மத வாதிகள் மக்களை ஏமாற்றி, தாங்கள் பிழைப்பதற்காக ஆத்திகம், நாத்திகம் என கூறி மக்களிடையே கருத்துக் குழப்பங்களை, சாதி, இன, பிரிவினை சண்டைகளை உண்டாக்கி, மக்களை ஏமாற்றி பிழைத்து வருகின்றார்கள்.
                          சித்தர்கள் வாழ்ந்த காலத்தில் இந்த ஆத்திகம் கிடையாது. நாத்திகமும் கிடையாது. அன்றும் மக்கள் இடையே இருந்தது, சித்தர்களின் சைவ சித்தாந்த வழி வாழ்க்கை முறை, ஆரிய வேதாந்த வழி வாழ்க்கை முறை என இரண்டு வகைதான். ஒரு மனிதன் ஞானம் அடைய தன்னையறிதல் வேண்டும் என்பது சித்தாந்த வழி, ஞானம் அடைய வேதம், புராணம், சாத்திரம் கூறிய வழியில் வாழ சொல்வது, ஞானத்தை, ஆன்மாவை வெளியில் தேட சொல்வது ஆரிய வேதாந்த முறை ஆகும்.
                         இன்றைய காலத்திலும் ஆத்திகம், நாத்திகம் என இரண்டு பிரிவு கிடையாது. இவைகளில் உண்மையும் கிடையாது. ஆனால், இன்றைய மனிதர்கள் இடையே மாயை மறைந்து இருப்பது உண்மை. ஞானத்தெளிவு இல்லாமல் இருப்பது மட்டும் உண்மை.
                         இன்றைய மனிதர்கள் இடையே சித்தர்கள் கூறிய சைவ சித்தாந்த கொள்கைபடி தனக்குள்ளே தன்னை தேடுபவன், தன் விதியை, தன் வாழ்வின் நிலையை அறிந்து கொண்டு, சமுதாயத்தில் இருக்கும் ஏமாற்றுகளை புரிந்து கொண்டு, கடவுளை போன்ற வேறு சக்திகளை நம்பாமல், தன்னையும், தன் உழைப்பையும்,தன் விதியையும் உணர்ந்து வாழ்பவன், சித்தர்கள் கொள்கைகளை ஏற்று, அவர்கள் கூறியபடி தன்னையறிந்து வாழ்பவன் நாத்தீகன் என்று கூறலாம். இந்த சைவ சித்தாந்த கொள்கைபடி வாழும் நாத்தீகன் எப்படி இருப்பான் என்பதை என் குரு பாம்பாட்டி சித்தர் அன்றே கூறி அடையாளம் காட்டி உள்ளார்.
                         தன்னையறிந் தொழுகுவோர் தன்னை மறைப்பார்            
                         தன்னை யரியாதவரே தன்னை காட்டுவார்
                         பின்னை யொரு கடவுளை பேண நினையார்
                         போரொளியை பேணுவார் ரென்றாடாய் பாம்பே
என்று கூறியுள்ளார். இது சித்தாந்தம் கூறும் வழி வாழ்பவன் நிலை.
                         ஆரிய வேதாந்தம் கூறும் மாயாவாதம் பேசி, ஆன்மீகம் என்று கூறிக் கொண்டு, தன்னையறிந்து கொள்ள, தன் விதியை மாற்றிட, தன் ஆன்மாவை பூசை, யாகம், வழிபாடு என மாயையின் துணை கொண்டு, வெளியில் தேடி அலையும், வேதாந்த கொள்கை கொண்டவர்கள் எப்படி இருப்பார்கள். அவர்களின் கடைசி நிலை என்ன என்பதையும் என் குரு பாம்பாட்டி சித்தர் அன்றே அடையாளம் காட்டி
                           ஏட்டு சுரைக் காய்கறிக் கெய்திடாது போல்
                           எண்டிசைதி ரிந்துங்கதி யெய்தலிலையே
                           நாட்டுக்கொரு கோயிற்கட்டி நாளும் பூசித்தே
                           நாதன்பாதங் காணார்களென் றாடாய் பாம்பே.
என்று வேதாந்திகளை பற்றியும் கூறிவிட்டார்.
                           எனவே நாத்திகம், ஆத்திகம் என்பது பிரச்சனைக்குரிய வாதம் அல்ல தற்போது நடைபெற்றுக் கொண்டு இருப்பது ஞானத்திற்கும், மாயைக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான்.
                           இப்போது உங்களுக்கு புரியும் நாத்திகமும், ஆத்திகமும்,சித்தாந்த ஞானமும், வேதாந்த மாயையும்.

                           "சித்தரை பற்றி வாருங்கள் வெற்றி நிச்சயம்"


தொடரும்.......

Saturday, 30 March 2013

அருவருப்பு ஆன்மீகம்


                ஆன்மீகம் என்ற பெயரில் இன்னும் சிலர் செய்யும் செயல்கள், பார்பவருக்கு மனதில் அருவருப்பை உண்டு பண்ணக் கூடியதாக இருக்கும். இந்த பிரிவினர் மண்ணில் உருண்டு புரளுதல், மண்சோறு சாப்பிடுதல், தீமிதித்தல், ஊசி, கம்பி, வேல், திரிசூலம் என கூர்மையான ஆயுதங்களை தன உடம்பில் குதி கொள்ளுதல், நிர்வாண பூசை நடத்துதல், தலையில் தேங்காய் உடைத்தல், அலகு குத்துதல் என்ற பெயரில் உடம்பு முழுவதும் ஊசிகுத்துதல், உயரத்தில் தொங்குதல், தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொள்ளுதல், கத்தியால் கீரிக்கொள்தல், ஆடு, கோழி இவைகளை பலியிட்டு கோவிலை சுற்றி ரத்தக் களறி ஆக்குதல், இவைகளை துடிக்கத் துடிக்க கடித்து பச்சை ரத்தம் குடித்தல் போன்ற இன்னும் பல செயல்களை ஆன்மீகம் என்ற பெயரில் செய்துவருவார்கள்.
                 இவர்களுக்கு இந்த ஆன்மீக செயல்களை செய்ய வழி காட்டுபவர்களை பூசாரிகள், கோடங்கிகள் என்று கூறுவார்கள். இந்த பாமரமக்களுக்கு யாகம், ஹோமம், வேள்வி இவைகளில் அவ்வளவாக நம்பிக்கை இராது. இவர்களுக்கு என்று ஒரு கோயில், ஒரு தெய்வம், அதற்கென்று ஒரு வழிபாட்டு முறைகள் உண்டாக்கப்பட்டு வழிபட்டு வருவார்கள். இவர்கள் வணங்கும் தெய்வங்களை குலதெய்வம், கிராம தெய்வங்கள்,எல்லை தேவதைகள் என்று கூறுவார்கள். பெரும்பாலும் இவர்கள் துர்தேவதைகளையே தெய்வங்களாக ஏற்று வழிபாடு செய்து வருவார்கள்.
                   இது போன்ற அருவருப்பான செயல்களை "ஆன்மீகம்" என்ற பெயரில் ஏழை எளிய மக்கள் செய்து வருகின்றார்கள். இதுவும் ஆன்மீகம் அல்ல, என உணருங்கள்.
                    இவர்களை பார்த்து என்குரு சிவவாக்கிய சித்தர் கூறுவதை கேளுங்கள்.
                     தங்கள் தேகம் நோய்பெறின் தனைபிடாரி கோயிலிற்
                     பொங்கல் வைத்தும் ஆடு, கோழி பூசை பலியை இட்டிட
                      நங்க சொல்லு நலிமிகுந்து நாளும் தேய்ந்து மூஞ்சூராய்
                      உங்கள் குலத் தெய்வமுங்க ளுருக்குலைப்ப துண்மையே -
என்கிறார்.
                      உலக மக்களே நீங்கள் நோய் வாய்ப்பட்டு விட்டால் உங்கள் ஊரில் உள்ள அம்மன், பிடாரி, கருப்பு தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து ஆடு, கோழி, பன்றி, என முப்பூசை இட்டாலும் அதனால் நோய், பிரச்சனை, கஷ்டம் தீராது. ஆனால் இந்த உயிர்களை கொன்ற பாவம், உங்கள் வாழ்வில் அதிகம் சிரமம், கஷ்டத்தை தரும். மேலும் சரீரமும், வாழ்க்கையும், தேய்ந்து போகும்.
                     கும்பிடும் தெய்வ மெலாம் குல தெய்வமாய் சோடித்தே
                      நம்பி நாளும் பூசை செய்து நற்படிகள் தந்திட
                      வெம்பிட வெதும்பிட மிடியதின லிடிபட
                      தெம்பிட குடிகெடுக்கும் செத்த தெய்வமாகுமே
                       நீங்கள் குல தெய்வம் என்று கூறி அந்த தெய்வம் தன்னை காக்கும் என்று எண்ணி, தினந்தோறும் பொங்கல் பூசை செய்து வந்த போதும் அந்த குல தெய்வம் உன் தெம்பை குறைத்து, உன்னை வெம்ப வைத்து, மனம் வெதும்பவைத்து உன் வாழ்வில் இடிவிழுந்தது போன்று கஷ்டம், பிரச்சனைகளை மேலும் அதிகமாக தரும் இந்த குல தெய்வம் என்பது குடியை கெடுக்கும் செத்த தெய்வம் ஆகும் என்கின்றார்.
                       இந்த வழிபாட்டு முறைகளும் ஆன்மீகம் அல்ல, இந்த முறையும்  ஞானம் அடைய உதவாது, தன்னையறியும் பக்குவத்தை தராது என புரிந்து கொள்ள வேண்டும்.

அச்சுறுத்தல் ஆன்மீகம்
                      இந்த அச்சுறுத்தல் ஆன்மீகம் என்பது தற்காலத்தில் தன்னை நம்பி வரும் மக்களை ஆன்மீகம் என்ற பெயரில் அச்சுறுத்தி பணம், பொருள் இவைகளை ஏமாற்றி வாங்கும் போலி குருமார்கள், மடாதிபதிகள், பீடாதிபதிகள் கோயில் பூசாரிகள், அருள்வாக்கு கூறுபவர்கள், ஏதாவது ஒரு சித்தரை, ரிஷியை வணங்கி வாக்கு சொல்கின்றேன் என கூறும் போலி ஜோதிடர்கள் மருளாளிகள், சாமியாடிகள், ஏவல், பில்லி, சூனியம் என கூறி பிழைப்பு நடத்தும் மந்திரவாதிகள், போன்ற நபர்கள் கடைபிடித்து வரும் ஆன்மீகம் ஆகும். தன்னை நம்பிய மக்களை, பக்தர்களை ஏமாற்றி, பரிகாரம் என்ற பெயரில் பணம் பறிப்பவர்களின் தந்திர வழி ஆன்மீகம் இது.
                     இந்த போலி நபர்கள் தன்னிடம் கஷ்டம், பிரச்சனை என்று வரும் மக்களிடம் உங்களுக்கு தெய்வ குற்றம் உள்ளது.  யாரோ ஏவல், சூனியம் வைத்துவிட்டார்கள். உன் வீட்டில் துஷ்ட சக்தி உள்ளது. நீ பிறருக்கு துரோகம் செய்துவிட்டாய், என எதையாவது ஒன்றை சொல்லி, அதற்கு பரிகாரம் செய்யவேண்டும் இல்லையேல் கஷ்டம் தீராது, மகப்பேறு கிடைக்காது, நோய் தீராது என கூறி பயமுறுத்தி விடுவார்கள். இன்னும் சிலர் கோதானம் செய், அன்னதானம் செய், இந்த மலைக்கு போ, காசிக்கு போ, ராமேஸ்வரம் போ, என்பார்கள். சிலர் ஓலையில் வந்தது, நாடியில் வந்தது, அருள் வாக்கில் வந்தது என எதையாவது கூறி, பாமர மக்களை அச்சுறுத்தி ஆயிரக்கணக்கில், லட்சக் கணக்கில் பணம் பறித்து விடுவார்கள்.
                     இந்த அச்சுறுத்தல் ஆன்மீகம் சில போலி நபர்கள், மக்களை ஏமாற்றி பணம் பறிக்க உதவுமேயன்றி மக்களின் கஷ்டம், பிரச்சனைகளை தீர்க்க உதவாது. மேலும் இந்த போலி குருமார்கள், வாக்கு சொல்பவர்கள் தீட்சை மந்திரம், நம்பர்பிளேட் எழுத்து போட்டு கோலம் வரைந்த அட்சரதகடுகள், தாயத்துகள், வாஸ்து என்ற பெயரில் ஏதாவது பொருட்கள், பொம்மை என கொடுத்து பணத்தை பிடுங்கி விடுவார்கள். இந்த பொருட்களை வைத்து வணங்குவதாலும் எந்த நன்மையும் கிடைக்காது. இதுவும் ஆன்மீகம் அல்ல.
                     ஆன்மீகம் என்ற பெயரில் இவ்வளவு பிரிவுகளை மக்கள் கடைபிடித்து வாழ்ந்து, ஏமாந்து வருகின்றார்கள்.
                      ஆன்மீகம் என்பது ஊர், ஊராக அலைந்து திரிந்து, காடு, மலை, ஏறி, கடல் நீரில் குளித்து, கடவுளை வணங்கி, பாட்டுபாடி குருவை பாத பூசை செய்து, பூசை, யாகம், அபிஷேகம் செய்து அலைவது, தீட்சை பெற்று மந்திரம் சொல்லி ஆன்மீகத்தை அடைய முடியாது. இதுவும் ஆன்மீகம் அல்ல.
                      என்குரு சிவவாக்கிய சித்தர் கூறுவதை கேளுங்கள்.
                      நட்டு வைத்த தேவரும் பொய் நான் மறை களாணதும் பொய்
                      கட்டிவைத்த புத்தக கதைகளும் பொய் புராணமும் பொய்
                      எட்டு திக்கு தேவரும்பொய் ஏழிரண்டு லோகமும் பொய்
                      மட்டில்லாத ஜோதினம் மனத்துள்ளே விளங்குமே.
                      பூசையும், தேவரும், புராணமும், தெய்வமும், வேதமும் பொய்யானது. நம் அகத்தில் உள்ள ஆன்ம ஜோதியை அறிதலே, அதாவது தன்னை உணர்தலே ஆன்மீகம் என்கின்றார்.
                      என்குரு பட்டினத்தடிகள் கூறுவதை கேளுங்கள்.
                      என்னை யறியா லெனக்குள்ளே நீயிருக்க
                      உன்னை யறியாமல் உடலழிந்தேன் பூரணமே.
                      வானென்பார் அண்டமென்பார் வாய் ஞானமே பேசி
                      தானேன்பார் வீணர் தனையறியார் பூரணமே.
                      ஒன்றாய் யுயிராய் உடல் தோறும் நீயிருந்தும்
                      என்று மறியார்களே ழைகள் தாம் பூரணமே.
                      நகார மகாராமென்பார் நடுவே சிகாரமென்பார்
                      வகார யகாரமென்பார் வகையறியார் பூரணமே.
                      வாசிதனைப் பார்த்து மகிழ்ந்துணைத்தான் போற்றாமல்
                      காசிவரை போய் திரிந்து காலலுத்தேன் பூரணமே.
                      உடலுக்குள் நீ நின்றுலாவினதைக் காணாமல்
                      கடல் மலைதோறும் திரிந்து காலலுத்தேன் பூரணமே - என்று கூறுகின்றார்.



தொடரும்.......









Friday, 29 March 2013

அலங்கார - அந்தஸ்து ஆன்மீகம்


                      இன்றைய நாட்களில் மக்களில் ஒரு பகுதியினர், ஆன்மிகம் என்பது தன்னுடைய அந்தஸ்தை, கௌரவத்தை வெளிப்படுத்தி, மற்றவர்கள் தன்னை மதிக்க வேண்டும். சமூகத்தில் மரியாதை அடைய வேண்டும் என எண்ணி ஆன்மிகம் என கூறி சில செயல்களை செய்து வருன்கின்றார்கள். இது ஆடம்பர, அலங்கார ஆன்மிகம் பணம் வசதி கொண்ட செல்வந்தர்கள் கடைபிடிக்கும் ஆன்மீக பாதையாகும் இவர்கள் தங்களிடம் உள்ள பணவசதியால் கோவிலை அலங்கரித்தல் கோவில் குடமுழுக்கு செய்வது, கோவில்களுக்கு பொருட்களை வாங்கி தந்து உபயம் என்ற பெயரில் தங்கள் பெயர்களை விளம்பர படுத்திகொள்வது , தேர், திருவிழா என்ற பெயரில் சாமியை அலங்காரம் செய்து, மக்களை கூட்டி விழா நடத்துவது, அதில் தங்கள் பெயர்களை விளம்பரம் செய்து தட்டி, கட் அவுட் என வைத்து கொள்வது, "திருவிளக்கு பூசை" என்ற பெயரில் பட்டுசேலை, பவுன் நகைகளை அணிந்து, மக்களிடையே தங்கள் செல்வநிலையை, அந்தஸ்தை வெளிப்படுத்தி கொள்வது போன்ற செயல்களை செய்து, தங்களை பெருமைபடுத்தி மனம் சந்தோஷப்படுவார்கள்.
                     இன்னும் சில பேர் தங்கள் அந்தஸ்து, கௌரவத்தை நிலைநாட்டிக் கொள்ள அறங்காவலர், அறங்காவல் குழு தலைவர், தக்கார், பரம்பரை கோயில் உரிமை, என பதவிக்கு போட்டி போடுவது, இதில் எதாவது தடை, பிரச்சனை ஏற்பட்டால் வழக்கு போடுவது, ஒற்றுமையான மக்கள் இடையே கோஷ்டி உண்டாக்கி பிரிவினையை உண்டு பண்ணுவது, கலவரம் செய்வது, கோவிலை மூடுவது, கடவுள், ஆன்மீகம் என்ற பெயரால் அர்ச்சகர், பூசாரிகளிடம் பணம் கொடுத்து பரிவட்டம், முதல் மரியாதை பெறுவது போன்ற செயல்களை செய்து கொண்டு வாழ்வார்கள். இது ஆன்மீகம் அல்ல. இந்த "அலங்கார ஆன்மீகம்" என்ற பெயரில் எவ்வளவு பணம், பொருள் செலவு செய்து கோவிலில் கடவுளை வணங்கிய போதும் தன்னையறிய முடியாது. தன் வாழ்வில் பிரச்சனைகளை தீர்த்து கொண்டு உயர்வு அடைய முடியாது.
                     இது போன்ற தன் சுய கௌரவத்திற்காக செலவு செய்து "ஆன்மீகம்" என்ற பெயரில் வாழ்பவர்களை பார்த்து என்குரு சிவவாக்கிய சித்தர் கூறுவதை கேளுங்கள்.
1.                  கல்லு கட்டை சாணி மண்ணு காராயிந்தூர செம்பில்
                     கொல்லன் வார்த்துரு வமைத்த கோயினுட் சிலைகளை
                     மல்லுகட்டாய்க் கட்டி மகோத்சவம் செய்த போதினும்
                     இல்லையே கதிபெறவும் ஏமனுப் பிணங்களே.

2.                  திருத்தலம் திருப்பணி திருவிழாவும் செய்திட
                     ஒருத்தர் நற்கதி பெறவும் உள்ளதோ சொல்லெங்கினும்
                     வருத்தமின்றி ஏழைகட்கு மாதுலர் பரங்கட்கும்
                     பெருத்தவன் அன்னதானம் செய்யப் பேருலகை அடைவாரே
                     -என்கின்றார்.
                     கல் சிலை, கட்டையில் சிலை, சாணியில் பிள்ளையார், மண்ணில் சிலை, இரும்பு, செம்பு, ஐம்பொன், உலோகங்கள் என எந்த பொருளில் கொல்லனிடம் கொடுத்து, கடவுள் சிலைகள் செய்து, கோயில் உள்ளே வைத்து கும்பிட்ட போதும், மிகவும் சிரமப்பட்டு, பெரும் பொருள், பணம் செலவு செய்து, எதிர்ப்புகள் இருந்த போதும், அவைகளை தடுத்து திருவிழா, விசேஷம், உற்சவம் என எதை செய்தாலும் உன் விதியை மாற்ற முடியாது. வாழ்வில் தடைகளை நீக்க முடியாது. நீவணங்கும் கடவுள், நீ அனுபவிக்க வேண்டியதை தடுக்க முடியாது. கடைசியில் நீயும் விதியை அனுபவித்து, வாழ்ந்து, எமனுக்குத்தான் பிணமாய் போவாய், தன்னையறிந்தால் மட்டுமே நீ நற்கதி அடைய முடியும். செல்வத்தால் செய்யும் கடவுள் வழிபாடு உனக்கு நற்கதியை தராது என்கிறார். இவர்கள் கடவுளை வணங்கிக் கொண்டே இருப்பவர்கள் ஆனால் கஷ்டம் தீராது. மேலும், மேலும் வாழ்வில் கஷ்டம் அதிகமாகும்.

                     இதுபோன்ற செலவுகளை ஆன்மீகம் என்ற பெயரில் செய்வதை விட்டுவிட்டு யாருமற்ற ஏழை குழந்தைகட்கும், ஊனமுற்றவர்களுக்கும் உதவி செய்தால் பேருலகை அடையலாம் என்கிறார் என்குரு.
                     இந்த ஆடம்பர ஆன்மீகம், அலங்கார ஆன்மீகம் என்ற பெயரில் பக்தி செலுத்தி இதனை பின்பற்றி வாழும் மக்கள் இருள் உலகில் வாழும் இருள் மனம் கொண்டவர்கள் எனலாம்.

அலங்கோல - அமங்கல ஆன்மீகம்
                   இன்றைய   காலத்தில் பலர் ஆன்மீகம் என்ற பெயரில் ஒவ்வொருவருக்கும், ஒரு தெய்வத்தை வழிபாடு செய்கின்றோம் என்று கூறி கொண்டு, ஆயிரக்கணக்கான தெய்வங்களை அங்கங்கே உருவாகி உருவாக்கி, ஆகமம் என்ற பெயரில் ஒரு சில பூசை விதிகளை நிர்ணயம் செய்து கொண்டு, முருகனுக்கும், சிவனுக்கும் காவி உடை, ஐயப்பனுக்கு கருப்பு உடை, நீல நிற உடை, அம்மனுக்கு சிவப்பு உடை என பள்ளி சிறுவர்கள் போல் சீருடை அணிந்து கொண்டும், ஆண்கள் தாடி, மீசை, சடை முடிவைத்துக் கொண்டும், பெண்கள் பூவைக்க கூடாது, பொட்டு வைக்ககூடாது ஒரு குறிப்பிட்ட உணவு தான் உண்ண வேண்டும், தினமும் பசனை செய்ய வேண்டும், என பல செயல்களை செய்துவருவார்கள். இன்னும் சிலர் பிரார்த்தனை என்ற பெயரில் மிருகம், கடவுள் என வேடம் தரித்துக் கொள்தல், கரும்புள்ளி, செம்புள்ளி என சரீரத்தில் குத்தி கொள்தல் வேப்பிலையை ஆடையாக தரித்துக் கொள்தல் போன்ற செயல்களை செய்து, தங்கள் உருவத்தை தாங்களே அலங்கோல படுத்தி கொள்வார்கள்.
                  இந்த அலங்கோல ஆன்மீகத்தை மக்களுக்கு கூறி வழி நடத்தும் போலி நபர்கள், சித்தர்பீடம், சக்தி பீடம், என வைத்துக் கொண்டு பாமர மக்களை ஏமாற்றி பணம் பறிப்பார்கள். இந்த போலி நபர்கள் அம்மாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் குறி சொல்லுதல், வாக்கு சொல்லுதல் என எதையாவது கூறி அதற்கு பரிகாரம், பிராயசித்தம் என்ற பெயரில் இந்த பாமர மக்களை ஏமாற்றி தன் வாழ்க்கையை சுகமாக அமைத்துக் கொள்வார்கள்.
                   இது போன்ற செயல்களை நம்பும் மக்கள், இந்த போலி நபர்களிடம் சக்தி உள்ளதாக எண்ணிக் கொண்டு தான் ஏமாறுவது தெரியாமல் ஏமாந்து கொண்டு இருப்பார்கள். இந்த மக்களை சிறு தெய்வ வழிபாடு செய்பவர்கள் என்று மற்றவர்கள் கூறுவர். இது போன்ற வழிபாட்டு முறைகளும் ஆன்மீகம் அல்ல. பக்தி என்ற பெயரால் தங்களை ஏமாற்றி கொள்தல் ஆகும். இந்த அலங்கோல பக்தி முறையாலும் தன் வாழ்வின், கஷ்டம், பிரச்சனை, இவைகளை தீர்க்க முடியாது.


தொடரும்.......

Thursday, 28 March 2013

 இன்னும்  என்குரு கொங்கனசித்தர் இந்த போலி குருமார்களை பற்றி கேளுங்கள்.

பூரணம் நிற்கும் நிலையறி யான்
                 பொய்சொல்வான் கொடிமந்திரஞ் சொல்வான்
 காரணகுரு அவனுமல் லவிவன்
                 காரிய குரு பொருள் பறிப்பான்
எல்லாமறிந்தவ ரென்றுசொல் லியிந்தப்
                 பூமியிலே முழுஞானி யென்று
உல்லாசமாக வயிறு பிழைக்கவே
                 ஓடித்திரிகிறார் வாலைப் பெண்ணே - என்கிறார்.

                 கலிகால போலி குருமார்கள் முழுமையான ஞானம் எப்படி அடைய வேண்டும்? ஆன்மா என்றால் என்ன? என்று அறிய மாட்டான். ஆன்மீகம் என கூறி பல கோடி விளக்கங்களை, பொய்யான மந்திரங்களை கூறுவான். இதனை தன் பக்தர்களுக்கு கூறி பொருளை, பணத்தை ஏமாற்றி பறித்து கொள்வான். தனக்கு எல்லாம் தெரியும், நானே பெரிய ஞானி, என்பான். இவன் மக்களின் கஷ்டம், பிரச்சனைகளை ஆராய்ந்து எப்படி ஏற்பட்டது என்று காரணத்தை கூறும் பிறரிடம் பொருளை ஏமாற்றி பறித்துக் கொள்ளும் காரிய குரு இவன். இவன் உல்லாச வாழ்க்கை வாழ ஊர், ஊராக சென்று மக்களை ஏமாற்றி, பணம் பறிப்பவன் என்று புரிந்து கொள் என்கிறார் குரு.

                இன்னும் இந்த கலி கால போலி குருமார்களைப் பற்றி என்குரு காகபுசுண்டரிஷி கூறுவதை கேளுங்கள்.

பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி
                பணம்பறிக்க உபதேசம் பகர்வோ மென்பான்
ஆரப்பா பிரம்மநிலை காட்டா மற்றான்
                ஆகாச பொய்களையும் மவன்தான் சொல்வான்
நேரப்பா சீடனுக்கு பாவமாச்சு
                 நிட்டை சொல்லுங் குருக்களுக்குத் தோடமாச்சி
வீரப்பா அடங்குகின்ற இடத்தைப் பாரான்
                 விதியாலே முடிந்த தென்று விளம்பு வானே - என்கிறார்.

                 இன்றைய கலிகால போலி குருமார்கள் ஊர், ஊராக சென்று, மக்களை விளம்பரபடுத்தி அழைப்பான். ஞான உபதேசம், பிரம்மநிலை, அறிதல், யோக பயிற்சி, நல்வாழ்வு அடைய உபதேசம், வாழ்வில் உண்டாகும், பிரச்சனை, கஷ்டம், வறுமை தீர வழிகாட்டுதல் தவம், தியான பயிற்சி, வகுப்பு என கூறி பறிப்பான். ஆனால் வாழ்வில் ஏற்படும் கஷ்டம் தீர வழிகாட்டமாட்டான் நம்ப முடியாத ஆகாய பொய்களையும், புராண இதிகாச கதைகளையும் கூறி ஏமாற்றிவிடுவான். இவனை நம்பி செல்லும் சீடனுக்கும், பக்தனுக்கும், மக்களுக்கும் மேலும், மேலும் பண விரையமும், பாவமும் தான் சேரும் இந்த குருவிற்கு சாபதோஷம் உண்டாகும். இவன் உடல், உயிர், ஆன்மாவின் தத்துவம் தெரியாதவன், பிறப்பும், வாழ்வும், இறப்பும் எதனால் என்று கேட்டால் இது "விதி" படி நடந்தது என்று கூறி விதியை காரணம் காட்டுவான்.

                  இந்த போலி குருமார்களை நம்பி பின்செல்லும் சீடனும், பக்தர்களும், மக்களும் பணத்தை இழப்பார்கள். இவர்கள் ஆன்மாவையும் அறிய மாட்டார்கள், தன்னையும் அறிய மாட்டார்கள். இந்த போலி குருமார்களை நம்பி பின்னால் அலையும் சீடனும், பக்தனும் வாழ்வில் உயர்வை அடைய மாட்டார்கள். ஆனால் இந்த போலி குருமார்கள் பணம், பதவி, புகழ், அந்தஸ்து, அதிகாரம், ஆடம்பர வாழ்வு கௌரவம் என அடைந்து விடுவார்கள். இவர்கள் நம்பும் சீடனை நர குழியில் தள்ளி விடுவார்கள்.


தொடரும்......