Sunday, 30 September 2012

"குரு வணக்கம்" -10

பாடல்:
"வச்சிரத்திற்   கோர்பழுது  வாய்க்கு  மாயினும்
 வல்லுடம்புக் கொருகுறை வாய்த்தி டாது 
 மெச்சுகட முள்ளவெங்கள் வேதகுருவின்
 மெல்லடி துதித்துநின் றாடாய் பாம்பே".

பொருள்:
என் வாழ்விற்கு வழிகாட்டும் ஆசானே குருவே மிகவும் 
பலம்  வாய்ந்தது என உலகமாந்தர்களால் கூறப்படும்
வஜ்ஜிரம் எனப்படும் பொருள் கூட பலம்  இழந்து
விடக்கூடும். ஆனால் ஞானமும், தவமும், சித்தும்,
உண்மையையும், சத்தியத்தையும் உலகமாந்தர்க்கு
தெளிவாக காட்டி வாழும் வழியினை ஒவ்வொரு
மாந்தருக்கும் உரைத்த என் குருவான சித்தரே தங்கள்
திருவடியினை பற்றி வணங்கி உங்கள் மென்மையான
பாதங்களை பணிந்து வாழும் எனதுசரீரத்திற்கு எந்த
பழுதும் வராமல் காத்து அருளும்படி வணங்குகின்றேன்.

      

Wednesday, 5 September 2012

"குரு வணக்கம்" - 9

பாடல் :
"கற்பகாலம் கடந்தாதி கர்த்தா வோடுங்
கடமழி யாதுவாழும் காரணக்குரு
பொற்பதமே தஞ்சமென்றே போற்று தல் செய்து
பூரணச் சிந்தையோ டாடாய் பாம்பே".

பொருள் :
இந்த பூமி தோன்றி பலகோடி காலங்களையும் ,மூன்று
யுகங்களையும் கடந்து , இந்த பூமியையும்,  நவ கோள்களையும், உயிர்களையும், தோற்றுவித்தவர் "கடவுள்" என்று வேதங்களால் குறிப்பிடப்படும் "இறைவன்" என்ற மூலப்பொருள் எப்படி
இன்றும் உள்ளது என்று கூறுகின்றார்களோ அந்த
இறைவனைப்போல் , இன்றும் கர்த்தாவாய் ,  ஆதி சக்தியாய்,
சரீரம் அழியாமல் வாழ்ந்து  வரும் என் குருவே!

இந்த பூமியிலும், அண்டவெளியிலும் கலந்து இருக்கும்
நவகோள்கள் , பஞ்சபூதங்கள் , இயற்கையின் செயலால்
உருவான மனிதர் , மிருகம் , பறவை , சீவ ராசிகள் மற்றும்
தாவரங்கள் ஆதியில் தோன்றிய உண்மை விபரத்தை அறிந்தவரே!
இறந்த காலம் , நிகழ்காலம் , எதிர்காலம் என  அனைத்து
காலங்களையும் அறிந்தவரே!

உடல் , உயிர் , இவை இரண்டும் அழிவில்லாத நிலையைப்பெற்று "சாகாகால்" ,"போகா புனல்", "வேகாத்தலை" என்ற சூட்சும
ரகசியத்தால் பஞ்ச பூதங்களை வென்று "மரணமில்லாப் பெரு 
வாழ்வு" பெற்று இன்றும் வாழ்ந்து வழிகாட்டிக்கொண்டு இருக்கும்
குருவே!

தாங்கள் அறிந்த  "வாசியோக" கலையை உலக மக்களுக்கும்
அறிய செய்த என் குருவே!
இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் , சீவராசிக்கும் ,
அவரவர் வாழ்க்கையில் உண்டாகும் அனுபவங்களுக்கும் ,
காரியம் செயல்களுக்கும் , வாழ்வின் நன்மை , தீமை , பிரச்னை,
கஷ்டம் இவைகளுக்கு ஒரு காரணம் உண்டு ,
"காரணம் இல்லையேல் - காரியம் இல்லை"  என்ற
உண்மையை உணர்த்தி, அந்த ஊள்வினைப் பதிவில் இருந்து
மீண்டு வெளியில் வர வழிகாட்டிய என் காரண குருவின்
பொற்பாதங்களை பூரணமாக பணிந்து வணங்குகின்றேன்.      
   

Tuesday, 4 September 2012

"குரு வணக்கம்" - 8

 பாடல் :
"அட்டதிக்கும் அண்ட வெளியான விடமும்
 அடக்கிய குளிகையோ டாடி விரைவாய் 
 வட்டமிட்டு வலம்வரும் வல்ல குருவின் 
 மலரடி தஞ்சமென் றாடாய் பாம்பே".
பொருள்: 
குருவே உங்கள் சக்தியினால்  நீங்கள் உருவாக்கிய 
ஒரு மூலிகை குளிகையை வாயில் அடக்கிக் கொண்டு
எட்டு திசைகளைஉடைய இந்த பூமண்டலத்தையும்,
அதற்கும் மேற்பட்ட ஆகாயத்தையும் , ஒரு நொடிப் 
பொழுதில்  சுற்றிவரும் வல்லமையும் , சக்தியும் 
பெற்ற என் ஞானகுருவே! 
உங்கள் மலர் பாதங்களே தஞ்சம் என்று பணிந்து 
வணங்குகின்றேன்.     

Monday, 3 September 2012

"குரு வணக்கம்" - 7

பாடல் :
"கூடுவிட்டுக் கூடுபாயுங் கொள்கையுடைய
 குருவின்வல் லபமெவர் கூற வல்லவர்
 வீடுபெறும் வகையைமென் மேலுங் காட்டும்
 மெய்க்குருவைப் பணிந்துநின் றாடாய் பாம்பே".  

பொருள் :
ஒரு உடலில் இருந்து மற்றொரு உடலுக்கு தன்
உயிர் நிலையை எடுத்துச்செல்லும் "ப்ரகாய பிரவேசம்"
என்னும் கூடுவிட்டு கூடுபாயும் என்ற மிகப்பெரிய
சக்தியை உடையவரே!
அணிமா , மஹிமா , ஹரிமா , லஹிமா , பிராப்தி , பிரகாமியம் (கூடுவிட்டு கூடுபாய்தல்), ஈசத்துவம் ,
வசித்துவம் , என்ற அஷ்டமா சித்துகள் சக்தியை
பெற்றவரே!
இதற்கு மேலும் உள்ள சக்திகளும் உள்ளவரே! உங்கள்
சக்திகளை எவராலும் அளவிட்டு கூறமுடியாது .
தங்களை குருவாக ஏற்று தாங்கள் போதனை செய்த
கருத்துகளை , கொள்கைகளை தன் நடைமுறை
வாழ்க்கையில் , ஞான நிலையுடன்  கடைப்பிடித்து
வாழ்ந்துவரும் மானிடர்க்கு மோட்சம் , முக்தி பெற்று
இனி பிறவி இல்லா பெருநிலையை அடைய மேலும் ,
மேலும் பல வழிகளை போதித்து வழிகாட்டி அருளும்
பூரண ஞான குருவே! உங்கள் திருவடியை பணிந்து
வணங்குகின்றேன்.

Sunday, 2 September 2012

"குரு வணக்கம்" - 6

பாடல் :
"காயம் நிலை யழிகையைக் கண்டு  கொண்டு பின்
 கற்புநிலை யுள்ளிற்கொண் டெக்கால மும்வாழும்
 தூயநிலைகண்டபரி சுத்தக் குருவின்
 துணையடி தொழுதுநின் றாடாய் பாம்பே".

விளக்கம் :    
உலகில் உருவான மனிதன் , விலங்கு , தாவரம் என
அனைத்துவகை உயிரினங்களின் சரீரம் , உயிர் இவைகள்
ஒருநாள் அழிந்து விடும் என்று தெரிந்து உணர்ந்துள்ள
ஒவ்வொரு மனிதனும் , சித்தர்கள் ஆகிய நீங்கள் காட்டிய
வழியில் உங்கள் போதனை , ஞான கருத்துகளை அறிந்து
கொண்டு வாழ்ந்தால்,வாழும் காலத்திலேயே "தன்னையறிதல்"
நிலையை அடைவான்.

அப்படி ஒரு மனிதன் தன்னையறிந்து கொண்டானாகில் தன்
பிறப்பின் "விதியை" , நிர்ணயக்கப்பட்ட வாழ்க்கை ரகசியத்தை
அறிந்து கொள்வான். தான் எப்படி வாழ்ந்தால் , தன்  வாழ்க்கை
நன்மை, மேன்மை, மகிழ்ச்சி, செல்வம் , செல்வாக்கான வாழ்வை
நாமே அமைத்து கொள்ளலாம்.

நிம்மதியும், இன்பமும் உள்ள வாழ்க்கையை எந்த சக்தியின்
உதவியும் இன்றி, எந்த மனிதரின் உதவியும் இன்றி அவரவரே
அமைத்துக்கொள்ள முடியும் என்ற சூட்சும பிரம்ம ரகசியத்தை
உலக மக்களுக்கு தெரியசெய்த குருவே !
என்பிறப்பு முதல் இறப்பு வரை எனக்கு துணையாக உள்ள
உங்கள் பொற்பாதங்களை வணங்குகின்றேன்.