Saturday, 30 March 2013

அருவருப்பு ஆன்மீகம்


                ஆன்மீகம் என்ற பெயரில் இன்னும் சிலர் செய்யும் செயல்கள், பார்பவருக்கு மனதில் அருவருப்பை உண்டு பண்ணக் கூடியதாக இருக்கும். இந்த பிரிவினர் மண்ணில் உருண்டு புரளுதல், மண்சோறு சாப்பிடுதல், தீமிதித்தல், ஊசி, கம்பி, வேல், திரிசூலம் என கூர்மையான ஆயுதங்களை தன உடம்பில் குதி கொள்ளுதல், நிர்வாண பூசை நடத்துதல், தலையில் தேங்காய் உடைத்தல், அலகு குத்துதல் என்ற பெயரில் உடம்பு முழுவதும் ஊசிகுத்துதல், உயரத்தில் தொங்குதல், தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொள்ளுதல், கத்தியால் கீரிக்கொள்தல், ஆடு, கோழி இவைகளை பலியிட்டு கோவிலை சுற்றி ரத்தக் களறி ஆக்குதல், இவைகளை துடிக்கத் துடிக்க கடித்து பச்சை ரத்தம் குடித்தல் போன்ற இன்னும் பல செயல்களை ஆன்மீகம் என்ற பெயரில் செய்துவருவார்கள்.
                 இவர்களுக்கு இந்த ஆன்மீக செயல்களை செய்ய வழி காட்டுபவர்களை பூசாரிகள், கோடங்கிகள் என்று கூறுவார்கள். இந்த பாமரமக்களுக்கு யாகம், ஹோமம், வேள்வி இவைகளில் அவ்வளவாக நம்பிக்கை இராது. இவர்களுக்கு என்று ஒரு கோயில், ஒரு தெய்வம், அதற்கென்று ஒரு வழிபாட்டு முறைகள் உண்டாக்கப்பட்டு வழிபட்டு வருவார்கள். இவர்கள் வணங்கும் தெய்வங்களை குலதெய்வம், கிராம தெய்வங்கள்,எல்லை தேவதைகள் என்று கூறுவார்கள். பெரும்பாலும் இவர்கள் துர்தேவதைகளையே தெய்வங்களாக ஏற்று வழிபாடு செய்து வருவார்கள்.
                   இது போன்ற அருவருப்பான செயல்களை "ஆன்மீகம்" என்ற பெயரில் ஏழை எளிய மக்கள் செய்து வருகின்றார்கள். இதுவும் ஆன்மீகம் அல்ல, என உணருங்கள்.
                    இவர்களை பார்த்து என்குரு சிவவாக்கிய சித்தர் கூறுவதை கேளுங்கள்.
                     தங்கள் தேகம் நோய்பெறின் தனைபிடாரி கோயிலிற்
                     பொங்கல் வைத்தும் ஆடு, கோழி பூசை பலியை இட்டிட
                      நங்க சொல்லு நலிமிகுந்து நாளும் தேய்ந்து மூஞ்சூராய்
                      உங்கள் குலத் தெய்வமுங்க ளுருக்குலைப்ப துண்மையே -
என்கிறார்.
                      உலக மக்களே நீங்கள் நோய் வாய்ப்பட்டு விட்டால் உங்கள் ஊரில் உள்ள அம்மன், பிடாரி, கருப்பு தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து ஆடு, கோழி, பன்றி, என முப்பூசை இட்டாலும் அதனால் நோய், பிரச்சனை, கஷ்டம் தீராது. ஆனால் இந்த உயிர்களை கொன்ற பாவம், உங்கள் வாழ்வில் அதிகம் சிரமம், கஷ்டத்தை தரும். மேலும் சரீரமும், வாழ்க்கையும், தேய்ந்து போகும்.
                     கும்பிடும் தெய்வ மெலாம் குல தெய்வமாய் சோடித்தே
                      நம்பி நாளும் பூசை செய்து நற்படிகள் தந்திட
                      வெம்பிட வெதும்பிட மிடியதின லிடிபட
                      தெம்பிட குடிகெடுக்கும் செத்த தெய்வமாகுமே
                       நீங்கள் குல தெய்வம் என்று கூறி அந்த தெய்வம் தன்னை காக்கும் என்று எண்ணி, தினந்தோறும் பொங்கல் பூசை செய்து வந்த போதும் அந்த குல தெய்வம் உன் தெம்பை குறைத்து, உன்னை வெம்ப வைத்து, மனம் வெதும்பவைத்து உன் வாழ்வில் இடிவிழுந்தது போன்று கஷ்டம், பிரச்சனைகளை மேலும் அதிகமாக தரும் இந்த குல தெய்வம் என்பது குடியை கெடுக்கும் செத்த தெய்வம் ஆகும் என்கின்றார்.
                       இந்த வழிபாட்டு முறைகளும் ஆன்மீகம் அல்ல, இந்த முறையும்  ஞானம் அடைய உதவாது, தன்னையறியும் பக்குவத்தை தராது என புரிந்து கொள்ள வேண்டும்.

அச்சுறுத்தல் ஆன்மீகம்
                      இந்த அச்சுறுத்தல் ஆன்மீகம் என்பது தற்காலத்தில் தன்னை நம்பி வரும் மக்களை ஆன்மீகம் என்ற பெயரில் அச்சுறுத்தி பணம், பொருள் இவைகளை ஏமாற்றி வாங்கும் போலி குருமார்கள், மடாதிபதிகள், பீடாதிபதிகள் கோயில் பூசாரிகள், அருள்வாக்கு கூறுபவர்கள், ஏதாவது ஒரு சித்தரை, ரிஷியை வணங்கி வாக்கு சொல்கின்றேன் என கூறும் போலி ஜோதிடர்கள் மருளாளிகள், சாமியாடிகள், ஏவல், பில்லி, சூனியம் என கூறி பிழைப்பு நடத்தும் மந்திரவாதிகள், போன்ற நபர்கள் கடைபிடித்து வரும் ஆன்மீகம் ஆகும். தன்னை நம்பிய மக்களை, பக்தர்களை ஏமாற்றி, பரிகாரம் என்ற பெயரில் பணம் பறிப்பவர்களின் தந்திர வழி ஆன்மீகம் இது.
                     இந்த போலி நபர்கள் தன்னிடம் கஷ்டம், பிரச்சனை என்று வரும் மக்களிடம் உங்களுக்கு தெய்வ குற்றம் உள்ளது.  யாரோ ஏவல், சூனியம் வைத்துவிட்டார்கள். உன் வீட்டில் துஷ்ட சக்தி உள்ளது. நீ பிறருக்கு துரோகம் செய்துவிட்டாய், என எதையாவது ஒன்றை சொல்லி, அதற்கு பரிகாரம் செய்யவேண்டும் இல்லையேல் கஷ்டம் தீராது, மகப்பேறு கிடைக்காது, நோய் தீராது என கூறி பயமுறுத்தி விடுவார்கள். இன்னும் சிலர் கோதானம் செய், அன்னதானம் செய், இந்த மலைக்கு போ, காசிக்கு போ, ராமேஸ்வரம் போ, என்பார்கள். சிலர் ஓலையில் வந்தது, நாடியில் வந்தது, அருள் வாக்கில் வந்தது என எதையாவது கூறி, பாமர மக்களை அச்சுறுத்தி ஆயிரக்கணக்கில், லட்சக் கணக்கில் பணம் பறித்து விடுவார்கள்.
                     இந்த அச்சுறுத்தல் ஆன்மீகம் சில போலி நபர்கள், மக்களை ஏமாற்றி பணம் பறிக்க உதவுமேயன்றி மக்களின் கஷ்டம், பிரச்சனைகளை தீர்க்க உதவாது. மேலும் இந்த போலி குருமார்கள், வாக்கு சொல்பவர்கள் தீட்சை மந்திரம், நம்பர்பிளேட் எழுத்து போட்டு கோலம் வரைந்த அட்சரதகடுகள், தாயத்துகள், வாஸ்து என்ற பெயரில் ஏதாவது பொருட்கள், பொம்மை என கொடுத்து பணத்தை பிடுங்கி விடுவார்கள். இந்த பொருட்களை வைத்து வணங்குவதாலும் எந்த நன்மையும் கிடைக்காது. இதுவும் ஆன்மீகம் அல்ல.
                     ஆன்மீகம் என்ற பெயரில் இவ்வளவு பிரிவுகளை மக்கள் கடைபிடித்து வாழ்ந்து, ஏமாந்து வருகின்றார்கள்.
                      ஆன்மீகம் என்பது ஊர், ஊராக அலைந்து திரிந்து, காடு, மலை, ஏறி, கடல் நீரில் குளித்து, கடவுளை வணங்கி, பாட்டுபாடி குருவை பாத பூசை செய்து, பூசை, யாகம், அபிஷேகம் செய்து அலைவது, தீட்சை பெற்று மந்திரம் சொல்லி ஆன்மீகத்தை அடைய முடியாது. இதுவும் ஆன்மீகம் அல்ல.
                      என்குரு சிவவாக்கிய சித்தர் கூறுவதை கேளுங்கள்.
                      நட்டு வைத்த தேவரும் பொய் நான் மறை களாணதும் பொய்
                      கட்டிவைத்த புத்தக கதைகளும் பொய் புராணமும் பொய்
                      எட்டு திக்கு தேவரும்பொய் ஏழிரண்டு லோகமும் பொய்
                      மட்டில்லாத ஜோதினம் மனத்துள்ளே விளங்குமே.
                      பூசையும், தேவரும், புராணமும், தெய்வமும், வேதமும் பொய்யானது. நம் அகத்தில் உள்ள ஆன்ம ஜோதியை அறிதலே, அதாவது தன்னை உணர்தலே ஆன்மீகம் என்கின்றார்.
                      என்குரு பட்டினத்தடிகள் கூறுவதை கேளுங்கள்.
                      என்னை யறியா லெனக்குள்ளே நீயிருக்க
                      உன்னை யறியாமல் உடலழிந்தேன் பூரணமே.
                      வானென்பார் அண்டமென்பார் வாய் ஞானமே பேசி
                      தானேன்பார் வீணர் தனையறியார் பூரணமே.
                      ஒன்றாய் யுயிராய் உடல் தோறும் நீயிருந்தும்
                      என்று மறியார்களே ழைகள் தாம் பூரணமே.
                      நகார மகாராமென்பார் நடுவே சிகாரமென்பார்
                      வகார யகாரமென்பார் வகையறியார் பூரணமே.
                      வாசிதனைப் பார்த்து மகிழ்ந்துணைத்தான் போற்றாமல்
                      காசிவரை போய் திரிந்து காலலுத்தேன் பூரணமே.
                      உடலுக்குள் நீ நின்றுலாவினதைக் காணாமல்
                      கடல் மலைதோறும் திரிந்து காலலுத்தேன் பூரணமே - என்று கூறுகின்றார்.



தொடரும்.......









1 comment:

  1. _/\_ஓம் சிவசிவ ஓம்_/\_

    நல்ல கருத்து ஐயா!!

    ReplyDelete